திமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவி வந்த வி.பி. துரைசாமிக்கு துணைத் தலைவர் பதவி.. முருகன் உத்தரவு
சென்னை: தமிழக பாஜகவின் துணைத் தலைவராக விபி துரைசாமியை நியமனம் செய்து அதற்கான உத்தரவை மாநிலத் தலைவர் எல். முருகன் பிறப்பித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி துரைசாமி அந்தக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி இருந்தன. இதையடுத்து, திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து துரைசாமியை நீக்குவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக அந்நியூர் செல்வராஜை உடனடியாக நியமித்து ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்.
இதைதொடர்ந்து, சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து அந்தக் கட்சியில் தன்னை வி.பி.துரைசாமி இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவர் பாஜகவின் துணைத்தலைவர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வந்தது.
இதை உறுதிபடுத்தும் வகையில் இன்று விபி துரைசாமியை தமிழக பாஜகவின் துணைத் தலைவர் பதவிக்கு நியமித்து அதற்கான உத்தரவை மாநிலத் தலைவர் முருகன் பிறப்பித்துள்ளார். இவருடன் கூடுதலாக வானதி ஸ்ரீநிவாசன், நைனார் நாகேந்திரன் ஆகியோரும் பாஜக துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக பாஜக நிர்வாகிகளில் மாற்றம் செய்யப்படாத நிலையில் இன்று மாற்றம் செய்து அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துரைசாமி ஏன் திமுகவில் இருந்து விலகினார்:
2016 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் விபி துரைசாமி போட்டியிட்டு அதிமுகவின் அமைச்சர் சரோஜாவிடம் தோல்வியுற்றார். அதன் பின்னர் கட்சியின் முக்கிய செயல்பாடுகளில் இருந்து துரைசாமி விலகியே இருந்தார். சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி.,யாவதற்கு சீட் கேட்டதாகவும், அப்போதும் மறுக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இதையடுத்தே அவர் பாஜகவில் ஐக்கியமானார் என்ற தகவலும் கூடவே வெளியாகி இருந்தது.












Click it and Unblock the Notifications