கொம்பு சீவிவிட்டு நீலிக்கண்ணீர் விடும் சசிகலா- ஜெயக்குமார் கடும் தாக்கு
சென்னை : அதிமுக தொண்டர்களுக்காக சசிகலா அறிக்கை விடுவது முதலை நீலிக்கண்ணீர் வடிப்பதற்கு சமமாகும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோருக்கு எதிராக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தொண்டர் ஒருவர் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இது தொடர்பான வீடியோ ஊடகங்களில் வைரல் ஆன நிலையில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை சசிகலா வெளியிட்டார். அதில் தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகள் மீது விழுந்த அடியாகவும் என் மீது விழுந்ததாகவும் தான் நினைக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
'அதிமுக ஆட்சியில் நிதி ஆதாரமே இல்லாமல் போனது..' சீண்டும் செந்தில் பாலாஜி.. ஜோராகும் கொங்கு அரசியல்
அறிக்கை வெளியிட்ட சசகலா
அந்த அறிக்கையில், தொண்டர்களின் நிலையை இருபெரும் தலைவர்களும் கண்ணீரோடுதான் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் கட்டி காத்த இந்த இயக்கத்தை சீரழித்துவிடாதீர்கள். இனியும் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது எனவும், தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின் மீது விழுந்த அடியாகவும், என் மீது விழுந்த அடியாகவும்தான் நான் நினைக்கிறன் என கூறியிருந்தார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
இந்நிலையில், ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அன்னதான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவை கடுமையாக விமர்சித்துள்ளார். பெரம்பூர் பாரதி சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்கனவே முறையாக அனுமதி பெற்று தான் நாங்கள் அஞ்சலி செலுத்த சென்றிருந்ததாகவும், நாங்கள் நிகழ்ச்சி முடித்து வெளியே வரும் பொழுது அமமுக தொண்டர்களை உள்ளே அனுமதித்து கலவரம் வரவேண்டும் என்பதற்காகவே சிலர் இப்படி செய்கின்றனர் எனவும், இதற்கு காவல் துறையினர் துணை போய் இருப்பது வேதனையாக உள்ளது என்றார்.
குண்டர் படையுடன் சசிகலா
பதிலுக்கு நாங்களும் சட்டத்தை கையில் எடுத்தால் நிலைமை மோசமாகி இருக்கும் எனவும், நாங்கள் சட்டத்தை மதிப்பதால் அமைதியாக இருந்து விட்டோம் என்ற ஜெயக்குமார், ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர் படையுடன் சசிகலா வரவில்லை எனவும் குண்டர்கள் படையுடன் வந்தார் என்றார். அமமுக என்ற கட்சி அம்மா கட்டிக்காத்த அதிமுகவுக்கு எதிரான கட்சி, தற்போது அமமுக தொண்டர்களையும் சசிகலாவையும் பிரிக்க முடியாது. இனியும் அவர்கள் அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என கூறினால் அதைக்கண்டு தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.
முதலைக் கண்ணீர் வடிக்கும் சசிகலா
கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அடிப்படை உறுப்பினர் இல்லாதவர்கள் வேண்டுமென்றே தலைமைக் கழகத்திற்கு வந்து ஒரு சலசலப்பை உண்டுபண்ண வேண்டும் என்ற நோக்கத்தோடு தலைமைக் கழகத்திற்கு வந்தார்கள் எனவும், தகுதி உள்ளவர்களை நாங்கள் மனுத் தாக்கல் செய்ய அனுமதி அளித்தோம், ஆனால் தகுதி இல்லாதவர்கள் தொண்டர்கள் என்ற போர்வையில் வெளியே நின்றுகொண்டு தகராறில் ஈடுபட்டனர் என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவர்களுக்காக சசிகலா அறிக்கை விடுவது, கொம்பு சீவி விட்டு அதற்காக முதலைக்கண்ணீர் வடிப்பதற்கு சமம் என தெரிவித்தார்.