"அவங்க" ஒற்றுமைலாம் உதட்டளவில்தான்.. அதிருப்தியில் அதிமுக மாஜி அமைச்சர்கள்.. விரைவில் திமுகவில்?
சென்னை: இனி அண்ணா அறிவாலயத்தில் விழாக்களுக்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் என்றே தெரிகிறது. ஆம்.. அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள் திமுகவில் இணைய போகிறார்களாம்.
அதிமுகவில் ஜெயலலிதா இருந்த வரை ராணுவ கட்டுப்பாடுகள் இருந்தது. கட்சியில் எந்த அமைச்சரும் எம்எல்ஏவும் பேட்டி கூட கொடுக்கமாட்டார்கள். சட்டசபையில் குறிப்பிட்ட விவாதத்தின் மீது பதில் அளிப்பதோடு சரி.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதா கட்டிக் காட்ட கட்டுக்கோப்பை இவரும் காப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

சிறை
ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் இவர் சிறை செல்ல நேரிட்டது. இதையடுத்து அதிமுகவில் பொதுக் குழு கூடி பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது, அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை உருவாக்கியது இதெல்லாம் நாடறிந்த உண்மையாகும்.

இரட்டை தலைமை
இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் இருந்தவரை இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வந்த நிர்வாகிகள் ஆட்சியில் இல்லாத நிலையில் பல்வேறு காரணங்களால் தனித்தனி அணியாக பிரிந்து கிடக்கிறார்கள். மேலும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தலில் வாய்ப்பு கிடைக்கவில்லை, கட்சியில் உரிய மரியாதை கிடைக்கவில்லை, அங்கீகாரம் கிடைக்கவில்லை என அதிமுக நிர்வாகிகள் குமுறி வருகிறார்கள்.

முன்னாள் எம்பி
அந்த வகையில் அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த் இரு தினங்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்தார். இதையடுத்து தோப்பு வெங்கடாசலமும் இன்றைய தினம் திமுகவில் இணைந்தார். இவருடன் ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.

தேர்தல்
தலைமைகள் உதட்டளவில் "ஒன்றாக" இருப்பதாக சொல்லப்பட்டாலும் மனதளவில் அவர் "பிரிந்தே" இருப்பதாக தொண்டர்கள் கூறுகிறார்கள். ஒரு உறையினுள் ஒரு வாள்தான் இருக்க வேண்டும், ஒரு கட்சியில் ஒரு தலைவர்தான் இருக்க வேண்டும் என கூறும் இவர்கள் அடுத்து வரும் தேர்தல்களிலாவது வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் முன்னாள் அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள் திமுகவில் இணைவார்கள் என கூறப்படுகிறது. இதனால் இனி அண்ணா அறிவாலயம் தினம் தினம் விழா கோலத்தில் காட்சியளிக்கும் என தெரிகிறது.











Click it and Unblock the Notifications