தமிழ்நாடு.. தனியார் மருத்துவமனைகளிலும் இனி இலவச கொரோனா தடுப்பூசி.. மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
இதுவரை அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி மையங்கள் மூலமாக இலவசமாக தடுப்பூசி போட்டுவரும் நிலையில் சுகாதார துறை அமைச்சரின் இந்த தகவல் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு மற்றும் பெருநிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி உதவியுடன் இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்த மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நேற்று நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டம்
இந்த கூட்டத்துக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மாநகராட்சி துணை கமிஷனர் மணிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

ஜூலை மாதம் கோட்டா
மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வருவதில், அவ்வபோது சிக்கல்கள் ஏற்படுகின்றன. மத்திய அரசு ஜூலை மாதத்துக்கு, தமிழகத்துக்கு 72 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச தடுப்பூசி போடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி
இதற்காக தனியார் ஆஸ்பத்திரிகளை சி.எஸ்.ஆர். நிதிக்கு கீழ் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகளை ஏழை, எளிய மக்களுக்கு போடுவதற்கு ஏதுவாக பெருநிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிதி மூலம் தடுப்பூசிகள் கொள்முதல் செய்து அதனை பொதுமக்களுக்கு செலுத்தலாம். இதன் மூலம் இலவசமாக தடுப்பூசி செலுத்த வாய்ப்பு ஏற்படும்.

வற்புறுத்தினால் நடவடிக்கை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை வாழ் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது போல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுப்போம். தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கிராமங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட கர்ப்பிணி பெண்கள் உட்பட யாரையும் அரசு வற்புறுத்தவில்லை. தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வுதான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி வற்புறுத்தினால், அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தடுப்பூசி செலுத்தும் அளவு
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு இதுவரை 18 லட்சத்து 70 ஆயிரத்து 520 தடுப்பூசிகள் வந்துள்ளது. அதில் இதுவரை 13 லட்சத்து 31 ஆயிரத்து 613 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 5 லட்சத்து 38 ஆயிரத்து 907 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. தமிழகத்தில் சி.எஸ்.ஆர்.நிதி வரவு பற்றியும் எங்கெல்லாம், எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஆன்லைனில் வெளிப்படையாக தகவல் வெளியிடப்படும்.

ஆக்சிஜன் பற்றாக்குறை
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை. அதேநேரம் அதிமுக ஆட்சியில் கடந்த மே மாதம் 4ம் தேதி செங்கல்பட்டில் 13 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமருக்கு கடிதத்தில் தெரிவித்துள்ளார். இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications