ஆகஸ்டுக்கு குறி.. DVACக்கு "பிரீ-ஹேண்ட்" தந்த தமிழ்நாடு அரசு.. அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஊழல் தடுப்புப்பிரிவிற்கு பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக அதிகாரிகள் இப்போதே முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்று இருக்கும் திமுக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வந்தது. ஒரு பக்கம் கொரோனா பணிகளை கவனித்தாலும் கூட இன்னொரு பக்கம் கிஷோர் கே சாமி கைது, கேமர் கைது மதன், சாட்டை துரைமுருகன் கைது என்று பல அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுத்தது.
இது போக முந்தைய அரசில் ஒப்பந்தங்களில் ஏற்பட்ட இழப்புகள், முறைகேடுகள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. நேற்று சட்டசபையில் 5 வருடங்களுக்கான சிஏஜி அறிக்கையும் வெளியிடப்பட்டது.
ஆபரேஷன்
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன. DVAC என்று அழைக்கப்படும் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவிற்கு முக்கியமான உத்தரவுகள் சென்று இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆகஸ்ட் முதல் வாரத்தில் முக்கியமான நடவடிக்கைளை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.
ஊழல்
முந்தைய அரசில் இவ்வளவு இழப்பு ஏற்பட்டது ஏன்? ஏன் நிதிநிலை மோசமாக இருக்கிறது? யாருடைய பாக்கெட்டுக்கு எல்லாம் பணம் சென்றது என்று DVAC இப்போதே விசாரணையை தொடங்கி உள்ளது. இதற்காக இப்போதே கடந்த 5 வருட கோப்புகளை DVAC தூசி தட்டி வருகிறதாம். ஏற்கனவே ஒரு செட் கோப்புகள் தலைமை செயலகத்திற்கு சென்று விட்டதாம்.
என்ன முடிவு
என்ன வேண்டுமானாலும் செய்யும், எந்த துறையில் வேண்டுமானாலும் விசாரணை நடத்துங்கள், ஆகஸ்ட் 1 வாரத்திற்குள் கோப்புகள் வர வேண்டும் என்று DVACக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. கோப்புகளை எப்படி வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள், யாரிடம் வேண்டுமானாலும் விசாரியுங்கள் என்று DVACக்கு தமிழ்நாடு அரசு முழு சுதந்திரமும் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
என்ன ஆப்ரேஷன்
யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும், யார் எல்லாம் இதில் சிக்குவார்கள் என்பது முழு ரிப்போர்ட் ரெடியான பின்புதான் தெரிய வரும். ஆனால் தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் அதே வாரத்தில் இந்த ரிப்போர்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவில் அரசு உள்ளதாக தெரிகிறது. ஒரு பக்கம் பட்ஜெட் கூட்டத்தொடர், இன்னொரு பக்கம் ஊழல் தடுப்புப்பிரிவு ஆக்சன் இதுதான் அரசின் தற்போதைய பிளான் என்று கூறுகிறார்கள்.
இழப்பு
நேற்று வெளியான 5 வருட சிஏஜி அறிக்கையில் மின்சாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை என்று ஒவ்வொரு துறையிலும் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தேவையற்ற செலவு, கூடுதல் செலவு என்று பல துறைகளில் நிதி முறைகேடு இருப்பது தெரிய வந்தது. DVAC கொடுக்க போகும் ரிப்போர்ட்களில் இது குறித்தும் விரிவான விவரங்கள் அடங்கி இருக்கும் என்று தகவல்கள் வருகிறது.