புதிய "அஸ்திரத்தை" கண்டுபிடித்த அமித் ஷா.. அடுத்த போகஸ் தமிழ்நாடுதான்.. இன்றே தொடங்கும் ஆபரேஷன்!
சென்னை: குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் இரண்டு விதமான நம்பிக்கைகளை பாஜகவிற்கு கொடுத்துள்ளது. இந்த தேர்தலில் கற்றுக்கொண்ட வித்தைகளை இனி மற்ற மாநிலங்களில்.. முக்கியமாக தென் மாநிலங்களில் பாஜக இந்த வித்தைகளை மொத்தமாக களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெல்லும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பொய்யாகி இருக்கின்றன. ஆம்.. வெறும் வெற்றி என்பதை தாண்டி மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக சென்று கொண்டு இருக்கிறது. 140 இடங்கள் வரை பாஜக வெல்லும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவித்தன.
ஆனால் பாஜக 150 இடங்களை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் இதுவரை வெற்றிபெறாத அளவிற்கு அதிக இடங்களை வென்று பாஜக புதிய ரெக்கார்ட் படைக்கும் அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.
குஜராத்தில் அடுத்த முதல்வர் யார்.. ட்விஸ்ட் வைக்குமா பாஜக.. பரபரப்பில் நிர்வாகிகள்
முன்னணி நிலவரம்
குஜாரத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கி உள்ளன. முதல்கட்ட நிலவரங்களின்படி பாஜக 150 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சி 8 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்பதை தபால் மற்றும் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இந்த ஆரம்ப டிரெண்ட்தான் இறுதிவரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் பாஜக கட்சிக்கு இது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். இந்த தேர்தல் வெற்றி மூலம் பாஜக 2 வித்தைகளை கற்றுள்ளது.
வித்தை 1 - ஜாதி
முதல் வித்தை சாதி. குஜராத்தில் பாஜகவின் இந்த வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் பட்டிதார் ஜாதி. பாஜகவிற்கு பட்டிதார் இன தலைவர்கள் கொடுத்த தீவிர ஆதரவு தேர்தல் முடிவில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. ஹர்திக் பட்டேல் பாஜகவிற்கு வந்தது அந்த கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவு அலையை ஏற்படுத்தியது. அதேபோல் தாக்கூர் ஜாதியை சேர்ந்த அல்பேஷ் தாக்கூர் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து பாஜகவிற்கு சென்றதும் பாஜகவிற்கு ஆதரவாக மாறியது. இரண்டு ஜாதிகளும் சேர்த்தும் 40% வாக்குகள் குஜராத்தில் உள்ளன.
தமிழ்நாடு ஜாதிகள்
இந்த ஜாதி வாக்குகள் பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. குஜராத்தில் உதவிய இந்த ஜாதி வாக்கு அரசியலை பாஜக கண்டிப்பாக தென் மாநிலங்களிலும் பயன்படுத்தி பார்க்கும். ஏற்கனவே தேவேந்திர குள வேளாளர் வாக்குகளை பெற பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. தென் மாநிலங்களில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக இந்த ஜாதி உள்ளது. தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் தென் மண்டலத்தில் முக்கியமான ஒன்றாகும்.இந்த தேவேந்திர குல வேளாளர் பிரிவினரின் வாக்குகளை மொத்தமாக அள்ளும் பட்சத்தில் அது மிகப்பெரிய கேம் சேஞ்சாக அமையும். தென் மண்டலத்தில் இவர்களின் ஆதரவை பெறும் கட்சி 2024 லோக்சபா தேர்தலில் எளிதாக வெற்றிபெற முடியும். இந்த நிலையில்தான் இவர்களின் ஆதரவை பெற பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.
ஜாதி
நான் நரேந்திரன்.. நீங்கள் தேவேந்திரர் என்று மோடி சொன்னது கூட இதனால்தான். இது போக முக்குலத்தோர், வெள்ளாள கவுண்டர்கள், வன்னியர்கள் மீதும் பாஜக குறி வைத்து வருகிறது. ஜாதி ரீதியாக பல்வேறு கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைக்க பார்க்கும். கண்டிப்பாக 2024 தேர்தலுக்கு இந்த ஜாதி பார்முலாவை பாஜக கையில் எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகாவிலும் இதே பார்முலாவை பாஜக கையில் எடுக்கும்.
வித்தை 2 - இலவசம்
இரண்டாவது வித்தை இலவச வாக்குறுதிகள்.குஜராத் தேர்தலுக்காக பாஜக கொடுத்த இலவச வாக்குறுதிகள் அந்த கட்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக அமைந்து உள்ளது. இலவசங்களை தேசிய அளவில் எதிர்க்கும் பாஜக குஜராத்தில் ஆம் ஆத்மியை சமாளிக்க பாஜகவும் இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கியது. குஜராத் சட்டசபை தேர்தலுக்காக பாஜக "Agresar Gujarat Sankalp Patra 2022" என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது. அதில் இலவச கல்வி கொடுப்போம், பெண்களுக்கு கிண்டர் கார்டன் முதல் பிஜி வரை கல்வி இலவசம் என்று பாஜக வாக்குறுதி கொடுத்தது. அதோடு, இலவச மருத்துவம், இரண்டு இலவச சிலிண்டர்கள், சன்னா குறைந்த விலையில், குறைந்த விலையில் எண்ணெய், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச மின்சார பைக் ஆகியவை வழங்கப்படும் என்று பாஜக அறிவித்தது.
இலவசம் அதிகம்
தமிழ்நாட்டில் பைக் வழங்கும் திட்டத்தை காப்பி அடித்து பாஜக இந்த வாக்குறுதியை கொடுத்தது. இந்த இலவசங்கள் மூலம் ஆம் ஆத்மி மீது மக்கள் பார்வை திரும்பாமல் பாஜக பார்த்துக்கொண்டு உள்ளது. அவங்க என்ன இலவசம் கொடுப்பது. நாங்கள் இலவசம் + இந்துத்துவா இரண்டையும் கொடுக்கிறோம் என்று பாஜக இரண்டு வகையான வாக்குறுதிகளையும் அள்ளிவிட்டு வென்றுள்ளது. இலவச வாக்குறுதிகள் அதிகம் கொடுக்கப்படும் தமிழ்நாட்டிலும் கண்டிப்பாக இதே பார்முலாவை அமித் ஷா அண்ட் டீம் களமிறக்கும். அமித் ஷா கண்டுபிடித்த இந்த புதிய அஸ்திரம் கண்டிப்பாக பாஜகவிற்கு தென் மாநிலங்களில் பெரிய உதவியாகவும், ஆம் ஆத்மியை எதிர்க்க சிறந்த கேடயமாகவும் அமைய போகிறது.
இன்றே ஆபரேஷன்
இதற்காகத்தான் பாஜக சார்பாக இன்றே சென்னையில் ஆலோசனை கூட்டம் ஒன்றும் நடக்க உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. பாஜக நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். பாஜக உட்கட்சி மோதல் தொடங்கி லோக்சபா தேர்தல் வரை பல விஷயங்கள் பற்றி இதில் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. நேற்று முதல்நாள் இரவு சென்னை வந்த அண்ணாமலை இன்று அவசர அவசரமாக உட்கட்சி கூட்டத்தை நடத்த உள்ளார். , லோக்சபா தேர்தல், பூத் கமிட்டி உருவாக்கம், கூட்டணி அமைப்பது போன்ற விவரங்கள் குறித்து அண்ணாமலை ஆலோசனை செய்ய உள்ளார். டெல்லி தரப்பில் இருந்து தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு பூத் தொடர்பாக முக்கியமான ஆலோசனை ஒன்று வழங்கப்பட்டு உள்ளதால் அதை பற்றி ஆலோசனை செய்ய உள்ளனர். சரியாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டிற்காக 2024 ஆபரேஷன் இன்றே பாஜக மூலம் தொடங்கப்பட உள்ளது!