கோவில்களை அறநிலையத் துறையிடமிருந்து மீட்க சொல்வது முட்டாள்தனம்- ஜக்கி மீது பிடிஆர் பொளேர்!
சென்னை: இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று எழுப்பப்படும் கோரிக்கை முட்டாள்தனமானது என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முட்டாள்தனமானது. தமிழகத்தில் உள்ள பழமையான ஆலயங்கள், மன்னர்களாலும், பேரரசர்களாலும் கட்டப்பட்டவை. யாரிடம் அந்த கோவில்களை நீங்கள் ஒப்படைக்க முடியும். பக்தர்களிடம் ஒப்படையுங்கள் என்று நீங்கள் சொல்லி விடுவீர்கள். அது சரியோ தப்போ அது இரண்டாவது விஷயம். எந்த பக்தரிடம் நீங்கள் அதை ஒப்படைப்பீர்கள் என்பதுதான் முதல் கேள்வி.
கமிட்டியை உருவாக்கி கோவில்களை பராமரிக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அந்த கமிட்டியை நிர்ணயிப்பது யார். உதாரணத்திற்கு.. ஒரு பக்தர் மதுரையில் பிறந்து இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் மீனாட்சி அம்மனின் தீவிர பக்தராக இருப்பார். இருப்பினும் அவர் சென்னையில் வசிப்பதாக இருந்தால், மீனாட்சியம்மன் கோவிலை நிர்வகிக்கும் தகுதி அவருக்கு இருக்கிறது என்பீர்களா, இல்லை என்பீர்களா.
அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்கள் பக்தருக்கு வழங்கப்பட்டாலும் அது ஒரு அமைப்பு என்ற வகையில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அதை அறக்கட்டளை என்று பதிவு செய்வார்களா அல்லது சொசைட்டி என்று பதிவு செய்வார்களா? இவை அனைத்தும் சட்ட வரம்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும். யார் இதை ஒழுங்குமுறைப்படுத்துவார்கள். யார் வரவு செலவுகளை தணிக்கை செய்வார்கள்?
காசு பார்க்கும் ஜக்கி வாசுதேவ்.. விளம்பரப் பேர்வழி.. விளாசி தள்ளும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இந்த குழுவிற்கு உறுப்பினர்களை எவ்வாறு தேர்வு செய்வீர்கள்? இந்த குழுவுக்கு தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பார்களா, அல்லது மாற்றப்பட்டு கொண்டே இருப்பார்களா? இவ்வாறு பல்வேறு கேள்விகள் அதில் இருக்கின்றன. எனவே, இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் கோவில்கள் இருப்பதுதான் சரியாக இருக்கும். இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மீனாட்சி அம்மன் மீது மிகுந்த பக்தி கொண்டவராகும். வாரத்துக்கு ஒரு முறையாவது கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட குறிப்பிட்டிருந்தார்.
நீதிக் கட்சி தலைவர்களில் ஒருவரான, இவரது தாத்தா பி.டி.ராஜன், சபரிமலையில் தீ விபத்து ஏற்பட்டு ஐயப்பன் சிலை சேதம் ஏற்பட்டபோது புதிய சிலையை வடிவமைத்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.