நேபாளத்தில் மீண்டும் பதற்றம்.. வீதியில் இறங்கிய ஜென் சி இளைஞர்கள்! போராட்டத்தால் கட்டுப்பாடுகள் விதிப்பு
காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த இரு மாதங்களாக இயல்பு நிலை நீடித்து வந்த நிலையில், இன்று திடீரென வன்முறை வெடித்துள்ளது. ஜென் Z இளைஞர்களுக்கும் முன்னாள் பிரதமர் கேபி சர்மா ஒலி அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோதலால், சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நேபாளத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளன.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஜென் சி (Gen Z) இளைஞர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கண்டித்து வீதியில் இறங்கிய இளைஞர்கள், நேபாளத்தில் அப்போது பிரதமராக இருந்த கேபி சர்மா ஒலிக்கு எதிராகவும் தீவிரமாக போராட தொடங்கினர்.

நேபாளம் வன்முறை
இளைஞர்களின் போராட்டத்தை கையாள முடியாமல் கேபி சர்மா ஒலி திணறினார். நிலைமை நாளுக்கு நாள் கையை மீறி போனது. அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற வளாகத்திலும் புகுந்த போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. வன்முறையில் 78 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
இதனால், வேறு வழியின்றி அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், ராணுவம் கேட்டுக்கொண்டதால் வேறு வழியில்லாமல் சர்மா ஒலியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நேபாளத்தில் இடைக்கால அரசு முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி தலைமையில் அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென மீண்டும் வன்முறை
செப்டம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத நெருக்கடிக்கு பிறகு, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு நேபாளம் திரும்பி வருகிறது. இத்தகைய சூழலில், கடந்த இரு மாதங்களாக நேபாளத்தில் இயல்பு நிலை நீடித்து வரும் நிலையில், இன்று திடீரென வன்முறை வெடித்துள்ளது. ஜென் Z இளைஞர்களுக்கும் முன்னாள் பிரதமர் கேபி சர்மா ஒலி அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலால், சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நேபாளத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளன. பாரா மாவட்டத்தில் மக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு எட்டு மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் விதிப்பு
நேபாளத்தின் வடக்கு பகுதியில் உள்ள பாரா மாவட்டத்தில் நேற்று CPN-UML கட்சியின் ஆதரவாளர்களும், ஜென் சி இளைஞர்களும் பேரணி நடத்தினர். அப்போது, இரு பிரிவினரிடையிலும் மோதல் ஏற்பட்டது. இதனால், பதற்றம் அதிகரித்ததால் உடனடியாக அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது சூழல் இயல்பாக இருப்பதாகவும் யாரும் படுகாயம் அடையவில்லை எனவும் நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.
மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்
தேவையற்ற அரசியல் பதற்றங்களை தூண்ட வேண்டாம் என்றும் நேபாள இடைக்கால அரசின் பிரதமர் சுஷிலா கார்கி கூறியுள்ளார். "மார்ச் 25, 2026ல் தேர்தல் அறிவித்துள்ளதால், ஜனநாயக நடைமுறைகள் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். தேர்தலுக்கு நியாயமான அச்சமற்ற சூழலை உருவாக்குவதற்காக அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்துள்ளேன். நாட்டை தொலைநோக்கு பார்வையுடன் நிர்வாகம் செய்ய புதிய தலைமுறையினரிடம் ஒப்படைக்க நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications