8 நாட்களில் 2 பெரிய சம்பவங்கள்.. இப்படி ஆகிடுச்சே.. கையை பிசைந்த அறிவாலயம்.. கட்டம் கட்டும் முதல்வர்
சென்னை: தமிழ்நாடு அரசு கடந்த மட்டும் 8 நாட்களில் 2 முக்கியமான விஷயங்களில் யூ டர்ன் போட்டுள்ளது. தங்கள் நிலைப்பாட்டை திடீரென அரசு மாற்றி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு ஆட்சிக்கு வந்த 1 வருடம் முடிந்துவிட்டது. கடந்த மே 7ம் தேதிதான் திமுக சார்பாக இது தொடர்பாக கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
வெறும் 1 வருடத்தில் தமிழ்நாடு அரசு நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை திமுக பட்டியலிட்டது. முதல்வர் ஸ்டாலினும் காலை உணவு திட்டம் தொடங்கி பல்வேறு புதிய திட்டங்களை மே 7ம் தேதி அறிவித்தார்.
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக மீண்டும் ரத்னவேல் நியமனம்! ஒரே நாளில் நடந்தது என்ன?
இரண்டு சம்பவங்கள்
முதலாம் ஆண்டு விழாவை திமுக கொண்டாடி வரும் நிலையில்தான் ஆளும் திமுக இரண்டு முக்கியமான விஷயங்களில் யூ டர்ன் போட்டுள்ளது. சரியாக 8 நாட்களில் இரண்டு பெரிய விவகாரங்களில் ஆளும் திமுக தரப்பு யூ டர்ன் முடிவு எடுத்துள்ளது. அது என்ன முடிவு.. ஆளும் திமுக தரப்பு இதை எப்படி பார்க்கிறது என்பது பற்றி பார்க்கலாம். இந்த மாத தொடக்கத்தில் மதுரை மருத்துவ கல்லூரியில் மகிரிஷி சரக சப்த் உறுதிமொழி எடுக்கப்பட்டது சர்ச்சையானது. அமைச்சர் பிடிஆர் உள்ளிட்டோர் மேடையில் இருக்கும் போதே சமஸ்கிருத உறுதிமொழி எடுக்கப்பட்டது பெரிய அளவில் சர்ச்சையானது.
மாற்றம்
இந்த விவகாரத்தில் மருத்துவ கல்லூரி டீன் இரத்தினவேலு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இரத்தினவேலு இந்த உறுதிமொழிக்கு அனுமதி கொடுத்தது தவறு என்று கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு சமூக வலைதளங்களில் இரண்டு விதமான கருத்துக்கள் வைக்கப்பட்டன. சிலர் இந்த முடிவை வரவேற்று உள்ளனர். அதே சமயம் அது டீன் தவறு இல்லை.. தமிழ்நாடு அரசுதான் இதில் முறையாக வழிகாட்டு முறைகளை வழங்கி இருக்க வேண்டும் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு
அதாவது சமஸ்கிருத உறுதிமொழி எடுக்க கடந்த பிப்ரவரி மாதமே தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால் தேசிய மருத்துவ ஆணையம் இதை கட்டாயம் எடுக்க வேண்டும் என்று கூறவில்லை. இந்த நிலையில், இந்த உறுதிமொழியை எடுக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு முன்பே பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து அப்படி உத்தரவு எதுவும் இல்லை என்பதால் மாணவர்கள் இந்த உறுதிமொழியை எடுத்தனர் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
மற்ற கல்லூரிகள்
அதேபோல் மதுரைக்கு முன்பே மற்ற கல்லூரிகளிலும் இதேபோல் உறுதிமொழி எடுத்துள்ளனர். அதை எல்லாம் அரசு தடுக்கவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதையடுத்தே அரசு தனது முடிவை வாபஸ் வாங்கியது. இதையடுத்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மருத்துவ கல்லூரி டீன் இரத்தினவேலு மீண்டும் பணி அமர்த்தப்பட்டார். அதேபோல் பல்லக்கு விவகாரத்திலும் தமிழ்நாடு அரசு தனது முடிவை மாற்றியது.
பல்லக்கு
தருமபுர ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் பதவி வகித்து வருகிறார். இவரை பல்லக்கில் தூக்கி சென்று பவனி வருவதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. இதையடுத்து மயிலாடுதுறை கோட்டாச்சியார் பாலாஜி பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதித்தார். இதற்கு தடை விதிக்கப்பட்டது பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பை சந்தித்தது. என்ன நடந்தாலும் இந்த பல்லக்கு நிகழ்வை நடத்தியே காட்டுவோம் என்று பாஜக சவால்விட்டது.
ஆதீனங்கள் எதிர்ப்பு
இந்த தடைக்கு ஆதீனங்கள் பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். என்ன ஆனாலும் இந்த நிகழ்வு நடந்தே தீரும். இந்து நிகழ்வு, பாரம்பரியம் ஒன்றை தடை செய்ய இவர்கள் யார்? என்று ஆதீனங்கள் புகார் வைத்தனர். இதையடுத்து விரைவில் அனைவரின் மனம் குளிரும்படி நல்ல முடிவு எடுக்கப்படும். தருமபுர ஆதீன பட்டின பிரவேசம் குறித்து சுமுகமான முடிவு எட்டப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். அவர் சொன்னபடியே இந்த விவகாரத்தில் பல்லக்கு தடை நீக்கப்பட்டது. அரசு கடந்த மே 1-9 வரையிலான இடைப்பட்ட 8 நாட்களில் எடுத்த இரண்டாவது யு டர்ன் ஆகும் இது.
அறிவாலயம்
அறிவாலயம் தரப்பில் இந்த இரண்டு விவகாரங்கள் கையை பிசைய வைத்து உள்ளதாம். இப்படி இரண்டு முடிவில் மாற்றம் செய்ய வேண்டியதாகிவிட்டதே.. இப்படி ஆகிடுச்சே என்று சில தலைகள் கையை பிசைந்து இருக்கிறார்களாம். இனி முடிவுகள் எடுக்கப்பட்டால் கொஞ்சம் நிதானமாக எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தரப்பும் கட்டம் கட்டி கவனமாக பார்த்து வருகிறதாம். கவனமாக நாம் அடியெடுத்து வைக்க என்று முதல்வரும் கண்டிப்புடன் பார்த்து வருகிறாராம்.
என்ன சொல்கிறார்கள்?
அதே சமயம் அரசு தரப்பு வட்டாரங்களோ.. அரசு சரியாக ஆலோசித்துதான் முடிவை மாற்றுகிறது. மக்களுக்கு என்ன தேவை என்று கருதி பிடிவாதம் பிடிக்காமல் நாங்கள் முடிவை மாற்றுகிறோம். இதில் தவறு என்ன இருக்கிறது. எடுத்த விஷயத்தில் பிடிவாதமாக இருப்பது தவறு. அரசு அந்த தவறை செய்யாது. முடிவை மாற்றுவது பின்னடைவு என்று ஆகாது. இதில் அரசுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று கூறியுள்ளனர்.