அண்ணாமலை பற்றி அவதூறு.. காயத்ரி ரகுராம் மீது கிரிமினல் வழக்கு பதிய சைபர் கிரைமில் புகார்!பாஜக அதிரடி
சென்னை: பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறு பரப்புவதோடு, வன்முறையை தூண்டும் வகையில் தவறான கருத்துகள் பரப்புவதாகவும், அவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக சார்பில் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக அவர் இருந்தார். இந்நிலையில் தான் காயத்ரி ரகுராமுக்கும், மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்தததாக கூறப்படுகிறது.

இதனை காயத்ரி ரகுராம் வெளிப்படையாக விமர்சனம் செய்தார். சமூக வலைதளங்களில் இது பெரிய விவாதத்தை கிளப்பியது. இதையடுத்து காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து 6 மாதம் வரை சஸ்பெண்ட் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார்.
இதில் அதிருப்தி அடைந்த காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து கட்சியில் இருந்து விலகிய அவர் தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ட்விட்டரில் தினமும் விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் காயத்ரி ரகுராம் மீது சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில துணை தலைவர் ஜிஎஸ் மணி அளித்துள்ளார். புகாரில் காயத்ரி ரகுராம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது பாஜகவை விட்டு விலகியதில் இருந்து மாநில தலைவர் அண்ணாமலை பற்றி காயத்ரி ரகுராம் அவதூறான கருத்துகளை பரப்பி வருகிறார். வன்முறையை தூண்டும் வகையில் தவறான கருத்துகளை கூறி வருகிறார். இதனால் காயத்ரி ரகுராம் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரை தொடர்ந்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛அண்ணாமலை, நான் உங்களை துஷ்பிரயோகம் செய்தேன், மிரட்டுகிறேன், பிளாக்மெயில் செய்தேன் என்று ஜிஎஸ் மணியிடம் அழுதீர்களா? நான் எப்போது செய்தேன்? உங்கள் நகைச்சுவை கருத்துக்களுக்காக நான் சிரித்துவிட்டு என் நகைச்சுவை கருத்துகளை தெரிவித்தேன். அவ்வளவுதான்.. ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? நீங்களும் சினிமா துறையைப் பற்றி பேசியுள்ளீர்கள்.. கருத்து சுதந்திரம் தானே.. கோச்சிக்க கூடாது'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications