யார் இந்த கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன்? எடப்பாடி பழனிசாமி மோதலால் திமுகவிற்கு அடித்ததா யோகம்?
சென்னை: கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், தமிழகமே இந்தத் தொகுதியை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த பல வருடங்களாகவே அதிமுகவின் பலமான கோட்டையாகத் திகழும் இந்த மண்ணில், இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, அதிமுகவின் முகமாக இருந்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் தவெக-வில் இணைந்து விசில் சின்னத்தில் களம் காண்பது அந்தப் பகுதியின் அரசியல் கணக்கே குலுங்குது.
இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் நாகரிகம் தாண்டி தனிநபர் விமர்சனங்கள் எல்லை மீறியது தொண்டர்களிடையே விவாதமானது... எடப்பாடி பழனிசாமி தனது முன்னாள் சகாவான செங்கோட்டையனை ஒருமையில் விமர்சித்ததோடு, அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து எச்சரிக்கை விடுத்தார்.

கோபிச்செட்டிப்பாளையம் செங்கோட்டையன்
குறிப்பாக, செங்கோட்டையன் குறித்துப் பல விஷயங்கள் தன்னிடம் இருப்பதாக அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்கு செங்கோட்டையன் அமைதியாக, அதேசமயம் கடுமையாக பதிலடி தந்திருந்தார்.. "சாக்கடையில் கல் எறிந்தால் நம் மீதுதான் நாற்றம் அடிக்கும். எடப்பாடியின் பேச்சும் அதுபோலவே இருக்கிறது" என அவர் கூறியது வைரலானது. செங்கோட்டையன் போன்ற ஒரு மூத்த தலைவர் அதிமுகவை விட்டு வெளியேறியது, அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
திமுகவின் நீண்ட கால வெயிட்டிங்
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் திமுக வெற்றி பெற்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் நெருங்கப்போகிறது. 1996 அலைக்கு பிறகு, இந்தத் தொகுதியைத் திமுகவால் கைப்பற்றவே முடியவில்லை.
1980-களில் இருந்து நடந்த பெரும்பாலான தேர்தல்களில் செங்கோட்டையனே இங்கு தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட, தமிழகம் முழுவதும் திமுக அலை வீசியபோதும், கோபியில் செங்கோட்டையன் சுமார் 28,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பலமாக வென்றார். அதிமுகவின் வாக்கு வங்கி + செங்கோட்டையனின் தனிப்பட்ட செல்வாக்கு சேர்ந்ததால்தான் இந்த தொகுதி இவ்வளவு நாள் அதிமுகவின் பிடியில் இருந்தது.
திமுகவின் மாஸ்டர் பிளான் - அதிமுக வாக்குகள் பிரியுமா
இந்த முறை அதிமுகவின் இந்த வலிமையையே அவர்களுக்கு எதிரான வாய்ப்பாக திமுக பார்க்கிறது என சொல்லலாம்.. செங்கோட்டையன் வெளியேறியது அதிமுகவின் வாக்குகளை இரண்டாகப் பிரிக்கும் என்பது திமுகவின் எதிர்பார்ப்பு.
இரட்டை இலை சின்னத்திற்காக விழும் வாக்குகள் ஒருபுறம், செங்கோட்டையனுக்காக விழும் வாக்குகள் மறுபுறம் என அதிமுக வாக்கு வங்கி சிதற வாய்ப்பு அதிகமா இருக்குது. இதோடு தவெக-வின் இளைஞர் வாக்குகளும் செங்கோட்டையனின் விசுவாசிகளும் இணையும்போது, அது அதிமுகவுக்குப் பெரும் சவாலாக அமையும்.
அதிமுக வாக்குகள் முழுமையாகச் செங்கோட்டையனுக்கும் போகாமல், இரட்டை இலைக்கும் போகாமல் சரிசமமாக பிரிந்தால், இடையில் திமுக முந்தி செல்ல வாய்ப்பு உண்டு. இதன் மூலம் 1996-க்குப் பிறகு மீண்டும் கோபியில் உதயசூரியன் உதயமாகுமா என்பது இன்று தெரிந்துவிடும்.
செங்கோட்டையனின் செல்வாக்கு விசில் சின்னத்தை வெற்றி பெற வைக்குமா அல்லது எடப்பாடியின் சவால் வென்று அதிமுக கோட்டையைத் தக்கவைக்குமா? இன்று மாலை வெளியாகப்போகும் முடிவுகள் அந்தப் பகுதியின் அடுத்த அரசியல் பாதையை முடிவு பண்ணும்.












Click it and Unblock the Notifications