சென்னை பொருட்காட்சி- இந்து சமய அறநிலையத்துறை அரங்கில் தெய்வ வழிபாட்டு முறைகள்- அமைச்சர் சேகர்பாபு
சென்னை: சென்னை தீவுத் திடல் பொருட்காட்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் அரங்கத்தில் தெய்வ வழிபாட்டு முறைகள், தெய்வங்களின் வரலாறுகள் இடம் பெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை என்பது கோவில் நிர்வாகத்துக்கு மட்டும்தானே தவிர சமய பரப்புரைக்கானது அல்ல என ஏற்கனவே விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் தெய்வ வழிபாட்டு முறைகளுடன் பொருங்காட்சி அரங்கம் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.
சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி வளாகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: சென்னை தீவுத் திடலில் நடைபெறும் 49ஆவது பொருட்காட்சியில் 46 அரசு துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. கலைஞர் பேருந்து நிலையம் உட்பட 6 பேருந்து நிலையங்களின் மாதிரிகளும் பொருட்காட்சியில் இடம் பெறும்.

இந்து சமய அறநிலைத்துறை அரங்கானது 8400 சதுர அடியில் அமைக்கப்படும். அனைத்து உலக முருகர் பக்தர் மாநாட்டை போல ஒரு வடிவமைப்பை இந்த பொருட்காட்சியில் அமைத்துள்ளோம். இதில் பல நூறு தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் இடம் பெறும். மேலும் தெய்வங்களின் வரலாறுகளும் இடம்பெறும். திமுக அரசின் 40 சாதனைகளை படங்கள் மூலமாகவும் விளக்க இருக்கிறோம்.
11 திருக்கோவில்களில் ரூ1.50 கோடியில் தொடங்கி வைக்கப்பட்ட அன்னதானத் திட்டம் குறித்த புகைப்படங்கள் இடம் பெறும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தினை விளக்கும் படங்களும் வைக்கப்படும். 400 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழக்கு நடைபெற்ற கன்னியாகுமரி கோவில் குறித்தும் கண்காட்சியில் படங்கள் இடம் பெறும்.
இந்த அரங்கில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கோவிலின் பிரசாதம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். எங்களது வழிபாடு ஒரே குறிக்கோளை கொண்டு தான் இருக்கும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை போன்று அரசியலை உள்ளே புகுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. எங்களைப் போன்ற ஆன்மீகவாதிகளுக்கு நன்கு தெரியும்.. அண்ணாமலை, முருகருக்கு விரதம் இருப்பதால் காலனி அணியாமல் இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications