எதுவா இருந்தாலும் மாலை சொல்கிறேன்.. முக்கிய அறிவிப்பு.. சஸ்பென்ஸ் வைத்த ஓபிஎஸ்.. என்னவாக இருக்கும்?
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடப் போவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட 95 சதவிகித அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்க பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கேற்ப ஓபிஎஸ் முடிவெடுக்க வேண்டும். அதிமுக ஜனநாயகம் மலர்ந்த ஒரு மாபெரும் இயக்கம். எந்த அராஜகப் போக்கும் இங்கே கிடையாது. ஓபிஎஸ் தவறு மேல் தவறு செய்கிறார். ஒரு தவறான பாதையை நோக்கி ஓபிஎஸ் சென்று கொண்டிருக்கிறார் என்பதை ஆழ்ந்த கவலையை மனக்கஷ்டத்தோடு சொல்லிக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ்-ன் முக்கிய ஆதரவாளர்களாக கருதப்பட்ட தென் சென்னை மாவட்டச் செயலாளர் அசோக் மற்றும் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றனர். அதுமட்டுமல்லாமல், ஓபிஎஸ்-ன் நம்பிக்கைக்குரிய நபராகவும், அனைத்து ஆலோசனையில் கூட்டத்திலும் இருந்தவருமான மைத்ரேயன் திடீரென இபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவளித்தார்.
இதனால் விரக்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் ஓபிஎஸ் விரைவில் ஜெ. நினைவிடம் செல்வதாக கூறப்பட்டது.
ஆனால் தனது இல்லத்திற்கு வந்த ஆதரவாளர்களை நேரில் சந்தித்த ஓபிஎஸ், பொறுத்திருங்கள், அமைதியாக இருங்கள், நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பொதுக்குழு நடைபெறுமா? அதில் பங்கேற்பீர்களா என்று செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், எதுவாக இருந்தாலும் மாலை சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications