அன்று 'அப்படி' இருந்த சென்னைக்கு இன்று 'இப்படியொரு' இடம்.. லிஸ்டை பாருங்க!
சென்னை: தமிழகத்தில் கடந்த 2ம் தேதிக்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில எந்த மாவட்டத்தில் அதிக சதவீத பாசிட்டிவ் கேஸ்கள் பதிவாகின என்ற விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் கொரோனா பாசிட்டிவ் சதவீதம் ஒரு சதவீதத்திற்கும் கீழ் என்கிற அளவில் குறைவாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2ம் தேதி மொத்தம் 160810 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 4230 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது மொத்தம் பரிசோதிக்கப்பட்டவர்களில் 2.6 சதவீதம் பேருக்கு தொற்று செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த சமயத்தில் 20 சதவீதம் வரை பாசிட்டிவ் இருந்தது. அதன்பிறகு 10 சதவீதம் ஆனது. தற்போது 2.6 சதவீதம் என்கிற அளவிற்கு குறைந்துள்ளது- 4ம் தேதியான இன்றைய நிலவரத்தில் பார்த்தால் இன்னமும் குறைந்திருக்க வாய்ப்பு உள்ளது.

எத்தனை சதவீதம்
தமிழகத்திலேயே அதிகபட்சமாக தஞ்சாவூரில் 5.1 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 4653 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 239 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவை
தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக மயிலாடுதுறை மற்றும் கிருஷ்ணகிரியில் பாதிப்பு 5 சதவீதம் என்கிற அளவில் உள்ளது. தமிழகத்திலேயே அதிக கொரோனா பாதிப்பு உள்ள கோவையில் 4.7 சதவீதம் அளவிற்கு பாதிப்பு உள்ளது.

ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, திருப்பூர், தேனி, சேலம், தர்மபுரி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 4 முதல் 5 சதவீதம் என்கிற அளவிற்கு பாதிப்பு உள்ளது. தமிழகத்திலயே அதிக கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் ஈரோட்டில் 2ம் தேதி சோதனை முடிவுகளின் படி 3.9 சதவீதம் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1 சதவீதத்திற்கு கீழ்
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 0.9 சதவீதம் பேருக்கு தான் பாதிப்பு இருந்தது. தமிழ்நாட்டிலேய மிககுறைந்த கொரோனா பாதிப்பு (சதவீத அடிப்படையில் ) உள்ள மாவடடமாக சென்னை உள்ளது. வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், தென்காசி, காஞ்சிபுரம் மாவட்டங்களில பாதிப்பு 1 சதவீதம் என்கிற அளவில் 2ம் தேதி நிலவரப்படி இருந்தது. அதேநேரம் இதர மாவட்டங்களில் 2 முதல் 3 சதவீதம் என்கிற அளவில் பாதிப்பு இருந்தது.












Click it and Unblock the Notifications