தமிழகத்தில் நீண்ட காலமாக சஸ்பெண்ட் ஆக உள்ள காவலர்களுக்கு குட்நியூஸ்.. டிஜிபி அதிரடி உத்தரவு
சென்னை: நீண்ட காலமாக சஸ்பெண்ட் ஆக உள்ள காவலர்களை மீண்டும் பணியில் சேர்க்க தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது. நீண்ட காலமாக பணியிடை நீக்கத்தில் உள்ளவர்களை வழக்குகளை ஆய்வு செய்து, தகுதியானவர்களை பணியில் சேர்க்க காவல் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். விரிவான அறிக்கையை வரும் பிப்ரவரி 13ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பணியிடை நீக்கத்தில் உள்ள காவலர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சிறு தவறுகளுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை முடிவடையாத நபர்களை, நிர்வாக நலன் கருதி மீண்டும் பணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பணியில் இல்லாமல் காவலர்களுக்கு ஊதியம் தரக்கூடிய சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் முக்கிய அம்சங்கள்
கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லாத காவலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணியிடை நீக்க வழக்குகளை ஆய்வு செய்ய மாவட்ட அளவில் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகரங்களில் ஆணையர்கள் தலைமையிலான குழுக்கள் ஆய்வு செய்யும்.
குற்றத்தின் தன்மை, விசாரணையின் தற்போதைய நிலை மற்றும் அந்த காவலரின் கடந்த கால நற்பெயர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தகுதியானவர்களை மீண்டும் பணியில் சேர்க்க பரிந்துரைக்கப்படும்.
மீண்டும் பணியில் சேர்க்கப்படுபவர்களுக்கு உடனடியாக முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகளில் பணி வழங்கப்படாது; மாறாக, ஆயுதப்படை அல்லது முக்கியத்துவம் குறைந்த பிரிவுகளில் அவர்கள் பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது.
காலக்கெடு
இது தொடர்பான விரிவான ஆய்வறிக்கையை வரும் பிப்ரவரி 13, 2026-க்குள் தமிழ்நாடு மாநில காவல்துறை தலைமையகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் டிஜிபி சார்பில் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் காவல்துறையில் பணிச் சுமை குறையும் என்றும், நீண்டகாலமாக பணியில்லாமல் இருக்கும் காவலர்களின் குடும்பச் சூழல் கருத்தில் கொள்ளப்படும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் பணியில் இல்லாமல் காவலர்களுக்கு சம்பளம் தரக்கூடிய சூழல் நீண்ட காலமாக நிலவுவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் 439 போலீசார் பணியிடை நீக்கத்தில் உள்ளனர். நீண்ட காலமாக பணியிடை நீக்கத்தில் உள்ள 202 போலீசாரில் கணிசமானோருக்கு பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications