ஆளுநர் குழந்தைத்தனமாக பேசுகிறார்.. எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் பேச்சு.. நயினார் நாகேந்திரன் ஆட்சேபம்
சென்னை: ஆளுநர் குழந்தைத்தனமாக பேசி வருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரில் அரசின் தனித்தீர்மானத்தில் பேசினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த போக்குக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 10 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. "மசோதாக்களை கிடப்பில் போட்டு அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்கி வைப்பதாகவும், பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிப்பதாகவும் என தமிழக அரசு தனது வாதத்தை முன்வைத்தது.
இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த நோட்டீஸில், 'மக்களின் உரிமைகளை சிதைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார்' என்ற தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை 20-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீண்ட நாள்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த மசோதாக்களில் சிலவற்றுக்கு விளக்கங்களைக் கேட்டு, ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்..
இந்த 10 மசோதாக்களில் பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள் தொடர்பானவை என்று கூறப்படுகிறது. இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உடனடியாக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படியே, இன்றைய தினம் 18ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் கூடியது.
இந்த சிறப்புக் கூட்டத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதக்களை மீண்டும் தாக்கல் செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏக்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் சிபிஐ எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் பேசியதாவது:- பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களை பல மாதங்களாக ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கிறார்.
தொடர்ந்து தமிழக ஆளுநர் மாநில அரசோடு போட்டியாக செயல்பட்டு வருகிறார். அதோடு இல்லாமல் பொது வெளியில் சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட மசோதா நிறைவேறவில்லை என்றால் அது நிராகரிக்கப்பட்டதாக குழந்தைத்தனமாக பொது வெளியில் பேசி வருகிறார். அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வரும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். முதல்வர் கொண்டு வந்த 10 மசோதாக்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, ஆளுநர் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறார் என்று தளி ராமச்சந்திரன் பேசியதற்கு பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஆட்சேபம் தெரிவித்தார். எம்.எல்.ஏவின் பேச்சில் உள்நோக்கம் இருப்பதாக பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கூறினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் சிறுபிள்ளை என்பது நல்ல வார்த்தைதான் என்றார். தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன்.. அந்த வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் குழந்தைத்தனமாக பேசி வருகிறார் என்றும் கூறி தனது பேச்சை தொடந்தார்.












Click it and Unblock the Notifications