தொடரும் ஆளுநர் - அரசு மோதல்! புதிய கல்விக்கொள்கையே “பெஸ்ட்”.. எதிர்ப்பவர்களை விமர்சித்த ஆர்என் ரவி
புதிய தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது என்று தெரிவித்து உள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அது பற்றி படிக்காமலும், அதனை அறியாமல் சிலர் எதிர்த்து வருவதாகவும் கூறி இருக்கிறார்.
சென்னை: புதிய தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது என்றும், அது பற்றி படிக்காமலும், அதனை அறியாமல் சிலர் எதிர்த்து வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார். புதிய கல்விக்கொள்கையினால் மட்டுமே இந்தியாவை இலக்கை அடைந்து விட முடியும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து வரும் நிலையில் ஆளுநர் இவ்வாறு கூறி இருக்கிறார்.
சென்னை தனியார் பள்ளியின் பொன்விழா ஆண்டு நிறைவு நாள் விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் பேசிய அவர், "மகிழ்ச்சியான உலகத்தை அடுத்த 25 ஆண்டுகளில் உருவாக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கே உள்ளது. புதிய கல்விக்கொள்கையினால் மட்டுமே இந்தியாவின் இலக்கை அடைந்திட முடியும்.
புரட்சி..புதிய கல்விக்கொள்கையால் நாட்டுக்கு வளர்ச்சி..வளர்ச்சிக்கு 5 மந்திரங்கள் சொன்ன ஆளுநர் ரவி
புரட்சிகரமானது புதிய கல்விக்கொள்கை
புதிய கல்விக்கொள்கை என்பது புரட்சிகரமானது. அதுபற்றி படிக்காமலும் அறியாமையின் காரணமாகவும் சிலர் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து வருகின்றார்கள். இந்தியாவின் இலக்கை புதிய கல்விக் கொள்கையின் மூலமாக மட்டுமே அடைந்திட முடியும். அதற்கு 5 மந்திரங்களை நாம் பின்பற்றிட வேண்டும்.
திமுக அரசு எதிர்ப்பு
இந்தியா முழுவதும் வளர்ந்த நாடாக வேண்டும் என்ற லட்சியத்துடன் நாம் இருக்க வேண்டும்." என்றார். மத்திய அரசு வடிவமைத்த புதிய கல்விக்கொள்கைக்கு திமுக எதிர்க்கட்சியாக இருந்தபொதே கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. தற்போது ஆளும் கட்சியான பிறகும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக அரசு மாநில கல்விக்கொள்கையை உருவாக்க குழு அமைத்து உள்ளது.
தொடர்ந்து ஆதரிக்கும் ஆளுநர் ரவி
ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு தருணங்களில் புதிய கல்விக்கொள்கையை தொடர்ந்து வரவேற்று ஆதரவாக பேசி வருகிறார். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் தேசிய கல்வி கொள்கை தொடர்பான தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
புதிய கல்விக்கொள்கை கருத்தரங்கம்
அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "சிக்கல்கள் இன்றி தேசிய கல்வி கொள்கையை சுமூகமாக செயல்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. சுமூகமாக தேசிய கல்வி கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
பிரதமர் மோடியின் இலக்கு
இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் பல்வேறு அரசாங்கங்களால் மறைக்கப்பட்டது. அவற்றை மீட்டெடுப்பதே புதிய கல்வி கொள்கை. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமர் மோடியின் இலக்கை அடைய தேசிய கல்வி கொள்கை உதவும். ஆங்கிலேயர் உருவாக்கிய இந்த கல்விக் கொள்கையை 75 ஆண்டுகளுக்கு பிறகு சீர் செய்ய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது." என்றார்.
உயர்கல்வி
இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் ராதா சுவாமி சிறப்பு மைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "தற்போது உயர்கல்வியில் கலை படிப்புகளை பயிலும் மாணவர்களில் 70% பேர் மட்டுமே முதுகலை படிப்புகளை முடிக்கின்றனர். அறிவியல் படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்யவதில்லை.
புதிய கல்விக் கொள்கையே தீர்வு
திறமையான ஆசிரியர்கள் இல்லாததன் காரணமாகவே மாணவர்கள் அதிகளவில் அறிவியல் படிப்புகளை தேர்வு செய்வது இல்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய தேசிய கல்விக்கொள்கை உள்ளது. இந்த சூழலில் இருந்து புதிய மாற்றத்தை கொண்டு வரும்." என்று அவர் இந்நிகழ்வில் உரையாற்றினார்.