அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு: அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை கேட்ட ஆளுநர்!
சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்என் ரவி பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தான் அவரை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதையடுத்து செந்தில் பாலாஜி நிர்வகித்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரிந்துரை செய்தார்.
மேலும் செந்தில் பாலாஜியை துறைகள் இல்லாத அமைச்சராக இருக்கவும் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதில் இலாகா மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கினார். மாறாக இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதாவது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இது கடந்த 16ம் தேதி நடந்தது.

இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 12 நாட்களாக அமைதி காத்து வந்த ஆளுநர் ஆர்என் ரவி இன்று அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவிட்டார். அதன்படி தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியை நீக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, ஆளுநரின் முந்தைய உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் சட்ட ஆலோசனை பெற ஆளுநர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிடிஐ செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஆளுநர் ரவி, அட்டர்ஜி ஜெனரலிடம் ஆலோசனை கேட்டுள்ளதால், அதுவரை, செந்தில் பாலாஜியை நீக்கி வைக்கும் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிகிறது. செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பார். இதனை முதல்வருக்கு மற்றொரு கடிதம் வாயிலாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications