பேரன் பிறந்த மகிழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன்! குழந்தைக்கு தங்கச் சங்கிலியை பரிசளித்த கனிமொழி எம்.பி.!
சென்னை: சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனுக்கு பேரன் பிறந்திருப்பதால், அக்குழந்தையை பார்க்கச் சென்ற கனிமொழி எம்.பி. தங்கச்சங்கிலியை பரிசாக அளித்திருக்கிறார்.
தனது குடும்பத்தினர் அனைவரையும் கனிமொழியிடம் அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் கீதா ஜீவன், குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
பேரன் பிறந்திருக்கும் சூழலிலும், வீட்டில் இருப்பதை தவிர்த்து வழக்கம் போல் தனது பணிகளை தூத்துக்குடியிலும், சென்னையிலும் கவனித்து வருகிறார் அமைச்சர் கீதா ஜீவன்.
ராகுல் காந்தியின் நடைபயணம்.. காங்கிரஸ் கட்சிக்கு புதிய வலிமை கொடுக்கும்.. கனிமொழி எம்.பி. நம்பிக்கை
அமைச்சர் கீதாஜீவன்
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் களமிறங்கியது முதல் தற்போது வரை அவருக்கு பக்கபலமாக இருப்பவர் அமைச்சர் கீதா ஜீவன். இவர்மட்டுமில்லை, இவரது தம்பியும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமியும் கனிமொழியின் தீவிர ஆதரவாளராக வலம் வருகிறார். கனிமொழி எம்.பி. கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் அக்காவையும், தம்பியையும் அவசியம் காணலாம்.
அமைச்சருக்கு பேரன்
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனின் மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அக்குழந்தையை பார்ப்பதற்காக நேற்று மாலை அமைச்சர் கீதாஜீவன் இல்லத்துக்குச் சென்ற கனிமொழி எம்.பி., குழந்தைக்கு தங்கச்சங்கிலியை பரிசாக வழங்கி வாழ்த்தினார். மேலும், குழந்தையை தன் மடியில் வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார். கனிமொழி தங்கள் வீடு தேடி வந்து குழந்தையை பார்த்துச் சென்றதால் அமைச்சர் குடும்பம் உற்சாகமடைந்துள்ளது.
வழக்கம் போல்
மகளுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்பதற்காக வீட்டிலேயே இருக்காமல், வழக்கம் போல் தனது பணிகளை ஆக்டிவாக கவனித்து வருகிறார் அமைச்சர் கீதாஜீவன். இதனிடையே இவர் திமுக துணைப் பொதுசெயலாளராக வர வாய்ப்புள்ளதாக ஆருடங்கள் கூறப்பட்ட நிலையில் மீண்டும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு வேட்பு மனு அளித்திருக்கிறார். இவருக்கு பெரியளவில் போட்டியில்லை என்பதால் மீண்டும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக வலம் வரவிருக்கிறார்.
கனிமொழி ஆதரவு
சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனும், அவரது தம்பி தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியும் கனிமொழியின் ஆதரவை பெற்றவர்கள் என்பதால் அவர்களது எதிர் கோஷ்டியினரின் புகார்கள் தலைமையிடம் எடுபடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.