ஆளுநர் உரைக்கு வருத்தமும், நன்றியும்..சட்டசபையில் பதிவு செய்ய எம்எல்ஏக்களுக்கு செயலர் கடிதம்
ஆளுநரின் சட்டசபை உரைக்கு வருத்தமும், நன்றியும் பதிவு செய்ய கோரி அறிவிப்பு வரப்பெற்றுள்ளதாக எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபை செயலர் கடிதம் எழுதியுள்ளார். சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் ஆளுநர் உரையாற்றியதற்கு பேரவை வருத்தத்தை பதிவு செய்கிறது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் ரவி உரையுடன் திங்கட்கிழமையன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. அப்போது, ஆளுநரின் தொடர் கருத்துக்கள் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சட்டமன்றத்தில் இருக்கும் திமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுநருக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்ததோடு, கண்டன கோஷங்களை எழுப்பி வந்தனர். ஆளுநர் படிக்கும்போது தமிழ்நாடு அரசின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட வரிகளை புறக்கணித்தார்.

இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டசபை தலைவர் மு.அப்பாவு வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் தனது உரையை முழுமையாகப் படிக்காததற்கு வருத்தம் தெரிவித்ததுடன், அரசால் அச்சடித்து வழங்கப்பட்ட தமிழ், ஆங்கில உரைகள் மட்டும் பேரவை குறிப்பில் இடம்பெறும். இவை தவிர்த்து ஆளுநர் பேசியது இடம்பெறாது என்ற தீர்மானத்தை கொண்டுவந்தார்.
சட்டசபையில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை வாசித்து முடிக்கும்போது, சட்டசபையை விட்டு ஆளுநர் வேகமாக வெளியேறினார். சட்டசபையில் தேசிய கீதம் பாடும் முன்னரே வெளியேறியது சர்ச்சைக்குள்ளாகியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆளுநரின் சட்டசபை உரைக்கு வருத்தமும், நன்றியும் பதிவு செய்ய கோரி அறிவிப்பு வரப்பெற்றுள்ளதாக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் எழுதியுள்ளார். சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் ஆளுநர் உரையாற்றியதற்கு பேரவை வருத்தத்தை பதிவு செய்கிறது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டசபையில் ஆளுநர் உரை வாசித்த உடன் அடுத்தடுத்த நாட்களில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த நிலையில் ஆளுநர் உரைக்கு வருத்தமும், நன்றியும் பதிவு செய்ய கோரி அறிவிப்பு வரப்பெற்றுள்ளதாக எம்.எல்.ஏக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் சட்டசபை செயலர்.












Click it and Unblock the Notifications