தமிழகத்தில் மளிகை பொருட்கள் விலை சரசரவென உயர்வு.. அதிரவைக்கும் விலை நிலவரம்
சென்னை: பொருட்களை கொண்டுவர வாகனங்களுக்கு அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை இருப்பது, பொருட்களை ஏற்ற ஆட்கள் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் தமிழகத்தில் மளிகை பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சோப்பு, பிஸ்கட், டெட்டால் உள்ளிட்ட சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் தேவைக்கு அதிகமாக வாங்கி குவிக்காமல் தேவைக்கு மட்டும் வாங்குவது நல்லது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 24ம் தேதி நள்ளிரவு தொடங்கி ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு அறிவித்து 17 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவருவதில் சிரமம் உள்ளது.
தமிழகத்திற்கு பல மளிகை பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து தான் வருகிறது. குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து பூண்டு, கடலைப்பருப்பு மற்றும்பாசிப் பருப்பு வருகிறது. கர்நாடகாவில் இருந்து தான் சர்க்கரை கோதுமை வருகிறது.ஆந்திராவில் இருந்து மிளகாய் , கொத்தமல்லி மற்றும் அரிசி வருகிறது. மகாராஷ்டிராவில் இருந்து கடலைப்பருப்பு வருகிறது.
வியாபாரிகள் விளக்கம்
இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக சரக்கு வரத்து தமிழகத்திற்கு முற்றிலும் குறைந்து உள்ளது. இதனால் மளிகை பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று வியாபரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கடலை பருப்பு விலை
கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் கொத்தமல்லி கிலோ 85 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. குண்டு மிளகாய் 135 ரூபாயில் இருந்து 155 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. கடலை பருப்பு விலை 54 ரூபாயில் இருந்து 66 ரூபாயாகவும், உளுந்தம் பருப்பு விலை 97 ரூபாயில் இருந்து 130 ஆகவும், பாசிப்பருப்பு விலை ரூ.105ல் இருந்து 130 ஆக உயர்ந்துள்ளது.
மிளகாய் விலை
இதேபோல் துவரம் பருப்பு விலை 87ரூபாயில் இருந்து 100 ரூபாய் ஆகவும், சர்க்கரை விலை 35 ரூபாயில் இருந்து 45 ரூபாயாகவும், மிளகு 350 ரூபாயில் இருந்து 450 ரூபாய் ஆகவும் மிளகாய் 145 லிருந்து 160 ரூபாய் ஆகவும் உயர்ந்து விற்பனை ஆகிறது. தமிழகத்தில் மக்கள் ஒரு மாதத்திற்கு முன்பே தேவைக்கு அதிகமான மளிகை பொருட்களை பலரும் வாங்கி வைத்துவிட்டார்கள். இதனால் சில பொருட்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது. விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது மேலே சொன்ன விலை எல்லாம் மொத்த விலையாகும், சில்லறை விலையில் 15 சதவீதம் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வாகனங்கள் கிடைப்பதில்லை
அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மிக குறைவாகவே வெளிமாநிலங்களில் இருந்து வருகிறது. அத்துடன் பொருட்களை ஏற்றி இறக்கவும் ஆட்கள் கிடைப்பது இல்லை. வாகனம் கட்டணமும் கூலி கட்டணமும் உயர்ந்துள்ளது. இதனால் விலையும் கணிசமாக உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.