அரசுக்கு நீளும் உதவிகள்.. ஜி.ஆர்.பி டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி!
சென்னை: ஜி.ஆர்.பி டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டுக்கு கொரோனா நிதியுதவியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் ஜி.ஆர்.பாலசுப்பிரமணியம், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நிதியுதவி வழங்கினார்.
தமிழ்நாட்டில் கொரோனா பணிகளை மேற்கொள்ள அரசுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டது.
இதனை தொடர்ந்து அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர்.
அனைத்து ஊடகவியாளர்களுக்கும் கொரோனா உதவித்தொகை .. வலுக்கும் கோரிக்கை.. தமிழ்நாடு அரசு என்ன செய்யலாம்?
ஜிஆர்பி டெய்ரி ஃபுட்ஸ் நிதியுதவி
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்பி டெய்ரி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாடு முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளது. ஜி.ஆர்.பி டெய்ரி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மற்றும் தலைவர் ஜி.ஆர்.பாலசுப்பிரமணியம் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
ஏற்கனவே உதவி புரிந்த நிறுவனம்
அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஜி.ஆர்.பி டெய்ரி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பாலா கார்த்திக் உள்ளிட்ட சிலர் உடன் இருந்தனர். ஜி.ஆர்.பி டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ரூ .9,14,500 மதிப்புள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இலவசமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் தலைவர் பெருமிதம்
நிவாரண உதவி செய்தது குறித்து ஜி.ஆர்.பி டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜி.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், ' இது மாநிலத்தில் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு நாங்கள் செய்யும் ஒரு பங்களிப்பாகும். ஒரு பொறுப்பான மற்றும் உறுதியான கார்ப்பரேட் குடிமகனாக இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசுக்கு உதவுவதற்கான கூட்டு முயற்சிகளில் ஒன்றாகும்' என்றார்.
தூய்மையின் அடையாளம் ஜிஆர்பி
ஜி.ஆர்.பி டெய்ரி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1984-ம் ஆண்டு ஜி.ஆர்.பாலசுப்பிரமணியத்தால் தொடங்கப்பட்டது. ஜி.ஆர். பாலசுப்பிரமணியம்,தயாரிப்பு அறிவு மற்றும் வணிக புத்திசாலித்தனம் கொண்ட நபர் ஆவார். இந்த நிறுவனம் நெய் உற்பத்தி நிறுவனத்திலிருந்து பல தயாரிப்பு, பல பிராண்ட் நிறுவனமாக உருவாகியுள்ளது. ஜி.ஆர்.பி டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் பொருட்கள் இந்திய மார்க்கெட்டுகளில் தூய்மை என்பதற்கான அடையாளமாக மாறியுள்ளது.
மூன்று மந்திரம்
பல ஆண்டுகளாக இந்த நிறுவனம் உண்மையான பாரம்பரிய சுவைக்கான நற்பெயரையும் மரபையும் உருவாக்கியுள்ளது. தூய்மை, சுவை மற்றும் தரம் ஆகியவற்றை வழங்குவதற்கான மூன்று தசாப்த கால நம்பிக்கையில் ஜி.ஆர்.பி டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.