திமுக VS பாஜக.. திராவிடமாடலுக்கும் தேசியமாடலுக்கு இதுதாங்க வித்தியாசம்.. விளாசி தள்ளிய எச் ராஜா
சென்னை: திமுகவின் திராவிட மாடல் அரசுக்கும், பாஜகவின் தேசிய மாடல் அரசிலுக்கும் முக்கிய வித்தியாசம் உள்ளது என புள்ளிவிபரங்களை வெளியிட்டு பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் 75வது சுதந்திர தினவிழா ஒரு ஆண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் முதல் அமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றினர். சென்னையில் தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
’கட்டபஞ்சாயத்து ராஜா' ஓபிஎஸ் பின்னணியில் திமுக! எல்லாத்துக்கும் அவங்கதான் காரணம்! விடாத ஜெயக்குமார்
எச் ராஜா விமர்சனம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுகவின் ஆட்சியை முதல் அமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் திராவிட மாடல் ஆட்சி என கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் தேசிய மாடல், திராவிட மாடல் அரசுகளுக்கு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் நடந்த மது விற்பனை மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்றும் ஹர் கர் திரங்கா பிரசாரம் ஆகியவற்றை ஒப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
இதுதான் வித்தியாசம்
‛‛இரண்டு செய்திகள். 1 சுதந்திர தினத்தன்று 5 கோடி பர் மூவர்ணக் கொடியேற்றி செல்பி எடுத்து அனுப்பியுள்ளனர். 2 சுதந்திர தினத்திற்கு முதல் நாள் தமிழகத்தில் 273.5 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. தேசியமாடல் அரசுக்கும், திராவிட மாடல் அரசுக்கும உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிகிறது'' என விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் மது விற்பனை எவ்வளவு?
அதாவது தமிழகத்தில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 14ல் ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.55.77 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.53.48 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.54.12 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.58.26 கோடி, கோவையில் ரூ.52.29கோடி விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
தேசியக்கொடியுடன் ‛செல்பி’
அதேநேரத்தில் சுதந்திர தினத்தையொட்டி 'ஹர் கர் திரங்கா' என்ற பெயரில் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15 வரை 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதனை பொதுமக்கள் செய்து தேசியக்கொடியுடன் செல்பி எடுத்து மத்திய கலாசார அமைச்சக இணையதளத்தில் பதிவேற்றினர். நேற்று மாலை 4 மணி வரை 5 கோடி தேசியக்கொடியுடன் 'செல்பி' புகைப்படங்கள் 'ஹர் கர் திரங்கா' இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்த 2 விஷயத்தை தான் குறிப்பிட்டு பாஜகவின் எச் ராஜா தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார்.