கைத்தறி நெசவாளர்களின் அடிப்படைக் கூலி 10% உயர்வு - அகவிலைப்படியும் 10% அதிகரிப்பு
கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படைக் கூலியில் 10 சதவிகிதமும், அகவிலைப் படியில் 10 சதவிகிதமும் உயர்வு வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
சென்னை: கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படைக் கூலியில் 10 சதவிகிதமும், அகவிலைப் படியில் 10 சதவிகிதமும் உயர்வு வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சட்டசபையில் தெரிவித்துள்ளார். நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் 406 தற்காலிகப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு சட்டசபையில் துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று செய்தி மற்றும் விளம்பரம், கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மீதான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் ஆர்.காந்தி பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

நெசவாளர் குறைதீர்ப்பு மையம்
சென்னை மயிலாப்பூர் லஸ் பகுதியில் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையம் 65 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும். கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தின் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி செய்யப்படும். கைத்தறி - துணிநூல் துறை ஆணையர் அலுவலகத்தில் நெசவாளர் குறைதீர்ப்பு மையம் அமைக்கப்படும்

அகவிலைப்படி உயர்வு
கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10 சதவிகிதமும், அகவிலைப்படியில் 10 சதவிகிதமும் உயர்த்தி வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்வுக்காக ஆரோக்கிய நெசவாளர் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஆறு கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் 75 நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும்.

கைத்தறி நெசவாளர் விருது
நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் 406 தற்காலிகப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். மாநில அளவிலான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

20 லட்சம் செலவில் விளம்பரம்
தமிழ்நாட்டின் கைத்தறி ரகங்களின் பாரம்பரியம், கைத்திறனைப் பாதுகாக்கும் வகையில் ரூ.5 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும். கதர், பாலிவஸ்திரா, பட்டு ரகங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மூலம் ரூபாய் 20 லட்சம் செலவில் விளம்பரப்படுத்தப்படும்.

சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
ரூ.6 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். தமிழ்நாடு கூட்டுறவுத் துணிநூல் பதனிடும் ஆலையின் உற்பத்தி - வியாபாரத் திறனை மேம்படுத்த ரூ.4 கோடி மதிப்பீட்டில் சலவை இயந்திரம் நிறுவப்படும் என்றும் அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications