"இது தமிழ்நாடு" ஆர்எஸ்எஸ் பின்வாங்கினால் மகிழ்ச்சியே.. திமுக எம்பி கனிமொழி!
சென்னை: தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பின்வாங்கியது மகிழ்ச்சி என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு அறிவுசார் மற்றும் கலை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப்பொதுச் செயலாளருமான கனிமொழி, எம்எல்ஏ மயிலை வேலு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கனிமொழி பேசுகையில், இந்த நிகழ்ச்சியை இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். எங்கள் மயிலாப்பூர் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

மயிலாப்பூர் பெருமைகள்
அப்படி சொல்லும் போது வரும் உணர்வு வேறு எங்கும் வராது. மிக பழமையான கோயில், தேவாலயம், மசூதி மயிலாப்பூரில் உள்ளது. இது திருஞான சம்பந்தர் பாடிய தளம். சிட்டி சென்டர், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் எல்லாம் உள்ளன. பழமை, புதுமை என எல்லாம் இருக்கும் ஒரு இடம் மயிலாப்பூர். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்று தான் இருக்கும். ஆனால் இங்கு தான் எல்லாம் இருக்கிறது.

மாணவர்களுக்கு அட்வைஸ்
இந்த காலத்தில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் திறமை இருக்கிறது. ஒருவருக்கு நடனம், பாட்டு, என பல்வேறு வகைகளில் திறமைகள் உள்ளது. உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது என்று தெரிந்துகொண்டு, அதில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும். உலக புகழ்பெற்ற எத்தனையோ எழுத்தாளர்களின் முதல் பதிப்புகள் புறக்கணிக்கப்பட்டது தான். இன்று பலரால் விரும்பி படிக்கவும் படுகிறது.

நம்பிக்கை தேவை
என் திறமை என் கனவு மீது நம்பிக்கை இருக்கிறது என்று அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். நாம் இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டோம். இது தான் உச்சம் என்று எடுத்துக்கொள்ள கூடாது. மென்மேலும் வளர வேண்டும். தன்னம்பிக்கை, உங்கள் திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆளுநர் விவகாரம்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம் ஆளுநர் விவகாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் பிரச்சினைகள் கொடுத்து வருகிறார்கள். பல நேரங்களில் மரபுகளை மீறி ஆளுநர்கள் செயல்படுகின்றனர். எதையெல்லாம் சர்ச்சையாக மாற்ற முடியுமோ, தொடர்ந்து அதுபோன்ற கருத்துக்களை ஆளுநர் பேசி வருகிறார்.

இது தமிழ்நாடு
மக்களால் தேர்ந்தெடுக்கக் கூடிய பிரதிநிதிகளை கொச்சைப்படுத்தக் கூடிய வகையில், மதிக்காத வகையில் நியமன பதவிகள் உள்ள ஆளுநர்கள் பேசி வருவது நிச்சயமாக அரசியலமைப்புக்கும், மாநில உரிமையையும் மீறும் செயல் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பேரணி பின்வாங்கியதா என்ற கேள்விக்கு, ஆர்எஸ்எஸ் பின்வாங்கினால் மகிழ்ச்சிதான். ஏனென்றால் இது தமிழ்நாடு என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications