லெப்ட்ல போயாச்சு.. ரைட்ல திரும்பியாச்சு.. பேசாம யுடர்ன் போட்ரலாம்.. துணிச்சல் எடப்பாடி?.. பாஜக "ஆ"
எடப்பாடி பழனிசாமி, இறுதியாக பாஜகவை கழட்டிவிட முடிவுசெய்துவிட்டாரோ என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளதா? இல்லையா? என்ற சந்தேகம் நிலவிவருகிறது.. இந்த சந்தேகத்தை வலுவாக்குவதுபோல், அடுத்தடுத்த சம்பவங்கள் நேற்று ஒரே நாளில் நடந்து, கூட்டணியின் கூடாரத்தையே அசைத்து பார்த்து கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
இதற்கு முன்பு நடந்த ஒரு இடைத்தேர்தலிலும் இப்படிப்பட்ட குழப்பங்களும், சலசலப்புகளும், ஏற்பட்டிருக்காது.. இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியானது, அனைத்து கட்சிகளையும் தாண்டி, டெல்லி வரை கவனிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது..
பலம்வாய்ந்த நிலையில் திமுக கூட்டணி தீயாய் களமிறங்கி வந்தாலும், அதிமுக கூட்டணியில் ஏகப்பட்ட அதிருப்திகளும், பரபரப்புகளும் வெளியாகி வருகின்றன.
ஈரோடு கிழக்கு தேர்தல்: உடைந்தது அதிமுக இபிஎஸ் அணி- பாஜக உறவு! தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி உதயம்!
பாயும் புலி
வழக்கமாக இடைத்தேர்தல் என்றால், ஆளும் கட்சியே வெற்றிபெறும் என்பது எழுதப்படாத விதி என்பதால், இந்த முறை எடப்பாடி போட்டியிடாமல், கூட்டணிக்கே தொகுதியை ஒதுக்கிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடுதிப்பென்று அதிமுக போட்டியிடும் என்று அறிவித்துவிட்டார்.. இந்த அறிவிப்புக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளதாக தெரிகிறது. அந்த காரணங்கள்தான், கூட்டணியில் பாஜக இடம்பெறுமா? இல்லையா? என்ற அளவுக்கு சென்றுவிட்டதாக சொல்கிறார்கள்.. அதுகுறித்த சில தகவல்கள்தான் தற்போது கசிந்து கொண்டிருக்கின்றன.
முனுசாமி
எடப்பாடி டீமுக்குள்ளேயே பாஜக ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்று 2 விதமான டீம்கள் உள்ளன.. 'கடந்த 2019 எம்பி தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பாஜவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காததே காரணம்' என்று சிவி சண்முகம், கேபி முனுசாமி போன்றோர் வெளிப்படையாகவே சொல்லி வருகிறார்கள்.. அதேபோல, செங்கோட்டையன் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயகுமார், ஓ.எஸ்.மணியன் ராஜன் செல்லப்பா இப்படி பல சீனியர்கள் பாஜகவுக்கு எதிர்ப்பு மனநிலைமையில்தான் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தலையும் இலையும்
இதனால், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று தனக்கு ஆதரவானவர்களே வலியுறுத்தி வரும்சூழலில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தவிர வேறு யாரிடமும் எடப்பாடி பழனிசாமியும் பேசுவதில்லை என்றே சொல்கிறார்கள்.. இந்த சூழலில்தான் இடைதேர்தல் அறிவிப்பு வெளியாகிவிடவும், தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்கி விடலாம் என்று பாஜக மேலிடம் எடப்பாடியிடம் சொன்னதாம்.. அதுமட்டுமல்ல, இலை கிடைக்காவிட்டால், பாஜகவின் தாமரை சின்னத்தில் யுவராஜா போட்டியிடட்டும் என்றும் பாஜக தரப்பு சொல்லியுள்ளது.. ஆனால், இதற்கு எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லையாம்.
கமலாலயம் வாசலில்
அதனால், அக்கட்சியின் சிடி ரவியும், எடப்பாடியிடம் 3 முறை போனில் பேசியுள்ளார்.. அதையும் எடப்பாடி ஏற்காத நிலையில், நேரடியாக வாசனிடமே பேசி அவர் வாயிலாகவே அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கவும் செய்துவிட்டார்.. இதுதான் பாஜகவுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம். இலை இல்லாவிட்டால் திமுகவுக்குதான் சாதகமாகிவிடும், அதனால் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது..
இலையும் தலையும்
ஆனால், அதையும் எடப்பாடி ஏற்க மறுத்துவிட்டாராம். இலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தனி சின்னத்தில் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிப்போம். அப்போது தான் உட்கட்சி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று கறாராக சொல்லிவிட்டு, தென்னரசுவையும் வேட்பாளராக அறிவித்துவிட்டார்... அதுமட்டுமல்ல, அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு, முக்கிய நிர்வாகிகளை கமலாலயத்துக்கு அனுப்பி வைத்தாரே தவிர, நேரடியாக சென்று, எடப்பாடி பழனிசாமி பாஜகவிடம் ஆதரவு கேட்கவில்லை.. இதுவும் பாஜக சீனியர்களுக்கு அதிருப்தியை தந்துள்ளது.
நேம் சேஞ்ச்
இதன் தொடர்ச்சியாகவே, நேற்றைய தினம் கூட்டணி "பெயர் மாற்றம்" விவகாரம், டெல்லிவரை எதிரொலித்திருக்கிறது.. தேர்தல் பணிமனை திறக்கப்பட்ட சூழலில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.. அந்த பதாகையில் பாஜக தலைவர்களின் போட்டோக்கள் இடம்பெறவில்லை.. பாஜகவின் நிலைப்பாட்டைதான் ஆதரிப்போம் என்று சொன்ன ஜான்பாண்டியன், ஏசி சண்முகம் ஆகியோரின் போட்டோக்களும் இடம்பெறவில்லை. இதுவும் பாஜக தரப்புக்கு அதிர்ச்சியை கிளப்பியது.. இதற்கு பிறகு சிறிது நேரத்தில், "தேசிய ஜனநாயக கூட்டணி" என்று மாற்றம் செய்யப்பட்டது...
ரத்தத்தின் ரத்தங்கள்
ஒருவேளை, மேலிடம்வரை விஷயம் சென்றதால்தான், பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவே கருதப்பட்டது. ஆனால், நேற்று நள்ளிரவில் மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதில், "எம்.ஜிஆர், ஜெயலலிதா அருளாசியுடன், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நல்லாசி பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளர் தென்னரசு" என்று கூறப்பட்டுள்ளது... இதன் மூலம் பாஜகவை எதிர்த்து எடப்பாடி ரெடியாகிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனாலும், ஒரே நாளில் எதற்காக 3 முறை இந்த பெயர் மாற்றம் என்பதுதான் புரியவில்லை என்று குழம்பி கொண்டிருக்கிறார்களாம் ரத்தத்தின் ரத்தங்கள்..!!