Vettaiyan: பாக்ஸ் ஆபிஸில் சொதப்பிய வேட்டையன்? நஷ்டத்தை சரி கட்ட ரஜினியிடம் டீல் பேசிய லைகா?
சென்னை: ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் போதிய வசூலை பெற்றுத் தராததால் அந்த இழப்பீட்டை ஈடுகட்ட தங்களுக்கு இன்னொரு படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என ரஜினியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்துள்ளன.
லைகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் அமிதாப், ரஜினிகாந்த், பகத் பாசில், ரானா, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் எங்கும் வெளியானது. இந்த படத்தில் பணத்தை மட்டுமே குறி வைத்து ஏழைகளை கடன்காரர்களாக்கும் நீட் பயிற்சி மையங்களுக்கு எதிராக கதை களம் நகர்ந்தது.

போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரஜினிகாந்த் என்கவுன்ட்டரை ஆதரிக்கிறார். ஆனால் நீதிபதியாக வரும் அமிதாப் பச்சன் அதை எதிர்க்கிறார். அரசு பள்ளி ஆசிரியையாக இருந்த துஷாரா விஜயன், திடீரென கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்.
அவரை கொன்றதாக நினைத்து இளைஞர் ஒருவரை தவறாக போலி என்கவுன்ட்டரில் ரஜினி சுட்டுக் கொன்றுவிடுவார். அதன் பிறகுதான் இறந்தவர், துஷாராவை கொன்றவர் இல்லை என தெரியவந்து, அந்த பெண்ணை கொன்றது யார் என்பதை கண்டறிந்து அவரை சட்டத்திடம் ஒப்படைக்கிறாரா, இல்லை என்கவுன்ட்டர் செய்கிறாரா என்பதுதான் கதை.
இந்த படத்தை பொருத்தமட்டில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறார்கள். அவரவருக்கு கொடுத்த கேரக்டரில் நன்றாக நடித்துள்ளார்கள். இந்த படம் வெளியாகி 11 நாட்களான நிலையில் இதன் வசூல் உலகளவில் 207 கோடி என சொல்லப்படுகிறது. ரஜினியின் திரைப்படங்கள் திரைக்கு வந்த 3 நாட்களிலேயே வசூலை குவிக்கும் நிலையில் இந்த படம் வசூலில் சாதனை படைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
வசூலில் சாதனை படைக்காததால் ரசிகர்களும் வேதனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. வேட்டையன் படம் வசூல் ரீதியில் பின்னடைவை தந்ததை அடுத்து இழப்பீட்டை ஈடுகட்ட லைகா நிறுவனம் ரஜினிகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அதில் தங்கள் பேனரில் இன்னொரு படத்தை நடித்துக் கொடுக்க வேண்டும் என ரஜினியிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அந்த படத்திற்கு ரஜினி வழக்கமாக வாங்கும் ஊதியத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்றும் லைகா கேட்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அமிதாப் பச்சனும் ரஜினிகாந்தும் 1991 ஆம் ஆண்டு ஹம் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தனர். அத்துடன் அவர்கள் இருவரும் 33 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இணைந்துள்ள நிலையில் இந்த படம் பெரும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கு நேர் எதிராக நடந்துவிட்டதாகவே சொல்லப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் அபிராமி, இதுவரை ஏற்று நடிக்காத ரோலில் நடித்திருந்தார். அது போல் திருடனான பகத் பாசிலின் தகவல் தொழில்நுட்ப அறிவை குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை கண்டறியவும் ரஜினிகாந்த் பயன்படுத்திக் கொள்கிறார். அவ்வப்போது பகத் செய்யும் காமெடி ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. இந்த படத்தில் பெரிதாக காமெடியன் இல்லாவிட்டாலும் பகத் அந்த குறையை நிவர்த்தி செய்கிறார். எல்லாவற்றுக்கும் மேல் காமெடியை காட்டிலும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பில்தான் ரசிகர்கள் சீட் நுனியில் அமர்ந்து பார்க்கிறார்கள். எனினும் ரஜினியும் சில காட்சிகளில் அவருக்கே உரித்தான காமெடியில் கலக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications