25 + 10.. "விட்ருவாங்க" போலயே.. அப்ப திமுக கூட்டணியில் "அவங்க" கிடையாதா.. ஸ்டாலின் யாரை சொன்னாரு?
வரும் எம்பி தேர்தலில் தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைக்காது என்றே தெரிகிறது
சென்னை: வலுவாக உள்ள திமுக கூட்டணியில், மேலும் ஒரு கட்சி புதிதாக கூட்டணி அமைக்கப்பட நிறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், திடீரென அதற்கு நேர்மாறான தகவல் கசிந்து வருகிறது..!!
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக மா.செ.கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு மிகுந்த கவனத்தை, இன்னமும் பெற்று வருகிறது..
"கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம். இந்த முறை 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். அதற்கான கட்டமைப்பை உருவாக்குங்கள். வலுவான கூட்டணியுடன்தான் நாம் போட்டியிடுவோம். கூட்டணி தொடர்பாக, தேர்தல் நேரத்தில் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அடிப்படைப் பணிகளை மேற்கொள்ளுங்கள்" என்று கூறியிருந்தார்.
PLAN 1
முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின், எம்பி தேர்தல் பணி குறித்து பேசியதுடன், கூட்டணி பற்றியும் தைரியம் சொல்லி உள்ளதால், தமிழக அரசியலே பரபரப்பாகிவிட்டது.. ஏற்கனவே திமுக கூட்டணி பலமாகவே இருந்தாலும், மேலும் சில கட்சிகள் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாகவும், அதனால்தான் முதல்வர் வலுவான கூட்டணியுடன் போட்டியிடுவோம் என்று கூறியிருப்பதாக கருதப்பட்டது.. அதுமட்டுமல்ல, மநீமய்யம் போலலே, விஜயகாந்தின் தேமுதிகவும் கன்பார்ம்மாக திமுக கூட்டணியில் இடம்பெறக்கூடும் என்றும் கூறப்பட்டன.. இதற்கு காரணம், விஜயகாந்த் மீதும் பாஜக மேலிட தலைவர்கள் பாசமாகவே இருக்கிறார்கள் என்றாலும்கூட, இத்தனை வருடம் நல்லுறவு வைத்திருந்தும்கூட, அமைச்சர் பதவி என்பதை கடைசிவரை மத்திய பாஜக தேமுதிகவுக்கு தரவில்லை..
விஜய்காந்த்
இதனால் சலிப்படைந்த தேமுதிக, இதற்கு பேசாமல் திமுகவுடனேயே கூட்டணி வைக்கலாம் என்ற முடிவுக்கு வரப்போகிறது என்றார்கள். விஜயகாந்த் மீது அபரிமிதமான பாசத்தையும், நட்பையும் பேணி வருபவர் ஸ்டாலின் என்பதால், அந்தவகையில், தேமுதிகவுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்கள்.. அதுமட்டுமல்ல, வலுவிழந்து போயுள்ள தேமுதிக, வரும் எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டால் தான், கூட்டணி பலத்துடன் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குள் முதல் முறையாக காலடி எடுத்து வைக்க முடியும் என்று தேமுதிக கட்சிக்காரர்கள் மத்தியிலேயே பேசப்படுகிறதாம்..
விஜயகாந்த்
தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் கட்சிக்கும், வரப்போகும் எம்பி தேர்தல் ஒரு சவாலாக அமையும் என்றும், திமுக கூட்டணியில் இடம் பெற தூது விடும் நடவடிக்கையும் விரைவில் ஆரம்பமாகும் என்றெல்லாம் கடந்த சில தினங்களாகவே தகவல்கள் பரபரத்தன... ஆனால், இப்போது வேறுவிதமான புது தகவல் ஒன்று வட்டமடிக்கிறது.. தேர்தலை எதிர்கொள்ள பல கட்சிகள் பூத் கமிட்டிகளை அமைப்பதில் அக்கறை காட்டி வருவதுபோல, தேமுதிகவும் அதிக அக்கறை காட்டி வருகிறதாம். அக்கட்சியின் தலைவர் விஜய்காந்த், தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் முடங்கி விட்டதால் அரசியல் ரீதியாக பல்வேறு பின்னடைவுகளை சமீபகாலமாக சந்தித்து வருகிறது தேமுதிக.
PLAN 2
அதனை உடைத்தெறியும் வகையில், ஒரு தேர்தல் வெற்றி அக்கட்சிக்கு அவசியம். இதனை உணர்ந்துள்ள கட்சியின் பொருளாளர் பிரேமலதா, பூத் கமிட்டி அமைப்பது குறித்து மா.செ.க்களை தொடர்பு கொண்டு விவாதித்தபடி இருக்கிறார். ஒரு பூத் கமிட்டியில் குறைந்தபட்சம் 25 பேர் இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார் பிரேமலதா. ஆனால், மா.செ.க்களோ, "ஒரு பூத் கமிட்டியில் 25 பேர் இருப்பது திமுக, அதிமுகவுக்கு மட்டும் தான் சாத்தியம். ஆனா, அந்த எண்ணிக்கைக்கு அவர்களே திணறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் எங்கே 25 பேரை சேர்க்க முடியும்? 10 பேரை கமிட்டியில் போடுவதற்கே ஆட்கள் இல்லை" என்று எதார்த்தத்தை பிரேமலதாவிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
பொய்த்தது
அதற்கு பிரேமலதா, "நீங்கள் சொல்லும் உண்மையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக அமைதியாகவும் இருந்து விட முடியாது. வருகிற தேர்தல் நமக்கு மிக முக்கியம். கணிசமான வெற்றி நமக்கு கிடைக்கும்.. ஏன்னா... ஸ்டாலின் நல்லாட்சி கொடுப்பார் என்று நினைத்து திமுகவுக்கு மக்கள் வாக்களித்து விட்டனர். அது பொய்த்துப் போய்விட்டதாக இப்போது மக்கள் நினைக்கின்றனர். எனக்கு வருகிற தகவல்படி, திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது.. அரசியலில் கேப்டன் இருந்திருக்க வேண்டும் என்று பலபேர் என்னிடம் சொல்கிறார்கள்.
டச்சிங்
அதனால் மக்கள் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். அது நம்ம கட்சியாக கூட இருக்கலாம். அதனால், தீவிரம் கவனம் செலுத்தினால் நிச்சயம் நமக்கு வெற்றிக் கிடைக்கும். கட்சிக்காக எவ்வளவோ உழைத்து விட்டீர்கள். இந்த தேர்தலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அர்ப்பணிப்பை காட்டுங்கள். எல்லாம் நல்லது நடக்கும். பூத் கமிட்டியில் சீரியஸ் காட்டுங்கள்" என்று டச்சிங்காக பேசியுள்ளார் பிரேமலதா. அவரது பேச்சு சோர்ந்துள்ள மா.செ.க்களிடம் ஒரு வித சுறுசுறுப்பை உருவாக்கியிருக்கிறது என்கிறார்கள் தேமுதிகவினர். சத்தமில்லாமல் தேர்தல் அரசியலில் தீவிரம் காட்டப் போகிறார்கள் கேப்டனின் தொண்டர்கள்... அப்ப திமுகவுடன் கூட்டணி இல்லையா???