கோவில் நிலங்களை பாதுகாப்பதில் அஜாக்கிரதை.. அறநிலையத் துறை மீது ஹைகோர்ட் கடும் அதிருப்தி
சென்னை : கோவில் நிலங்களை பாதுகாப்பதில் அஜாக்கிரதையாக செயல்படுவதாக அறநிலையத் துறை மீது அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவில் நிலங்களை மீட்க உரிய வழிமுறைகளை மேற்கொள்ளாவிட்டால், கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது..
நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அகத்தீஸ்வரர் கோயில்
அப்போது மனுதாரர் தரப்பில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் அளவும், மீட்டதாக அரசு தெரிவிக்கும் அளவும் முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு
இதையடுத்து,கோவிலுக்கு சொந்தமான நிலம் எவ்வளவு? ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் எவ்வளவு? மீட்கப்பட்ட நிலம் எவ்வளவு என விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் அதிருப்தி
மேலும், கோவில் நிலங்களை பாதுகாப்பதிலும், ஆக்கிரமிப்புகளை மீட்கும் நடவடிக்கைகளில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்படுவதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
ஆக்கிரமிப்புகளை மீட்க உரிய வழிமுறைகளை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வழக்கை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications