தபெதிகவினர் 92 பேர் மீதான வழக்கு.. ரத்து செய்தது ஹைகோர்ட்
சென்னை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 92 பேர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
கடந்த 2007 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரத்தை தூண்டியதாகவும்,காவல்துறையினரை தாக்கியதாகவும், லோகு அய்யப்பன் உள்ளிட்ட 92 பேர் மீது பாண்டிச்சேரி முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த 2009-ஆம் ஆண்டு காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான முழுமையான விவரங்கள் இடம் பெறாததால், மீண்டும் விசாரணை நடத்தி புதிதாக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..
காவல்துறை புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விசாரணையை விரைந்து முடிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த வழக்கில் ஒரு மாதத்தில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டம்.. வணிகவளாகம் கட்ட எதிர்ப்பு.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
இந்தநிலையில், ஒரு மாதமாகியும் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் குற்றம் சாட்டப்பட்ட நபர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் காணாமல் போய் விட்டதாகவும், மீண்டும் வழக்கை ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க வேண்டிய நிலைக்கு புதுச்சேரி காவல்துறை தள்ளப்பட்டுள்ளதாகவும், பாண்டிச்சேரி அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்
தொடர்ந்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, 12 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மீண்டும் இந்த வழக்கை முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என காவல்துறை கோருவதால், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பது வீணான கால விரயம் எனவும், அதன் அடிப்படையில், 92 பேர் மீதான வழக்கை ரத்து செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.