சென்னையை துவம்சம் செய்த மழை - சாலை, தண்டவாளங்களை மூழ்கடித்த மழை நீர் - போக்குவரத்து பாதிப்பு
சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. தண்டவாளங்களில் தேங்கிய மழைநீரால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ளநீர் அகற்றப்பட்ட பின்னர் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் விடியவிடிய கனமழை கொட்டித்தீர்த்தது கனமழை நீடிப்பதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஆவடி, அம்பத்தூர் ரயில் நிலைய தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து திருவள்ளூருக்கு இயக்கப்படும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மின்மோட்டார்கள் மூலம் தேங்கிய வெள்ளநீர் அகற்றப்பட்டதை அடுத்து ரயில் போக்குவரத்து சீரானது.
Recommended Video
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
இந்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரி ஆக மாறிய சென்னை
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நகரும் வேகம் 27 கிலோ மீட்டரில் இருந்து 21 கிலோ மீட்டராக குறைந்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால் பொது மக்கள் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் சென்னையில் மாலையில் தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. ஏற்கனவே குளம் போல காட்சியளித்த சாலைகள் ஏரிகளாக மாறி விட்டன. சென்னையை பொறுத்தவரை தாம்பரத்தில் 23 சென்டிமீட்டர் அளவுக்கு அதிகன மழை பெய்துள்ளது.

இருளில் மூழ்கிய பகுதிகள்
தாம்பரத்தில் அதி கனமழை பெய்துள்ள நிலையில் அங்கு உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கன மழையால் வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. பெரம்பூர் ,வியாசர்பாடி, மேற்கு மாம்பலம், தியாகராயநகர் ,கேகே நகர் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக வியாசர்பாடி, கணேஷபுரம், அஜாக்ஸ், கொங்கு ரெட்டி, மேட்லி, துரைசாமி, பழவந்தாங்கல், தாம்பரம், அரங்கநாதன், வில்லிவாக்கம், காக்கான் ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. கேகே நகர் ராஜமன்னார் சாலை, மயிலாப்பூர் டாக்டர் சிவசாமி சாலை, ஈவிஆர் சாலை காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை ,செம்பியம் ஜவஹர் நகர் , பேரவள்ளூர் 70 அடி சாலை, புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, பட்டாளம் மணிக்கூண்டு ,வியாசர்பாடி முல்லை நகர் பாலம் ஆகியவற்றில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புறநகர் ரயில் சேவை
ஆவடி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் ரயில் நிலைய தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னை சென்ட்ரல், பீச் ரயில் நிலையங்களில் இருந்து திருவள்ளூருக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. மின்மோட்டார்கள் மூலம் தேங்கிய வெள்ளநீர் அகற்றப்பட்டதை அடுத்து ரயில் போக்குவரத்து சீரானது. மற்றொரு வழித்தடமான சென்னை - கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை வழக்கம்போல நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகனமழை பெயும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications