ஆஹா.. தமிழ்நாட்டில் ஆரம்பிச்சிருச்சு.. 'கருமேகங்கள்' சூழ 10 மாவட்டங்களில் அடிச்சு ஊத்த போகுது கனமழை!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல் விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில பரவலாக மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: வெப்பச்சலனம் மற்றும் குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி (3.1 முதல் 4.6 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், கோவா, கர்நாடக கடலோர பகுதி முதல் தென் தமிழ்நாடு வரை (1 கிலோமீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மழைக்கு வாய்ப்பு உள்ளது,
10 மாவட்டங்கள்
05.6.2021 அன்று விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம். நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்
உள்மாவட்டங்கள்
06.06.2021 அன்று தமிழ்நாட்டின் ஒரு சில வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 07.06.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை வானிலை
8ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
சிவகங்கையில் அதிகம்
இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் 9 செமீ மழையும், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 8 செமீ மழையும், மதுரை மாவட்டம் பேரையூரில் 7 செமீ மழையும் பெய்துள்ளது. திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.
கடலுக்கு செல்ல வேண்டாம்
மீனவர்களுக்கு எச்சரிக்கை, கேரள கடலோர பகுதிகள்,லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவே மீனவர்கள் இன்றும் 8ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் செல்ல வேண்டாம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.