இடி மின்னலுடன் 9 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை அடி வெளுக்கும் - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 5ஆம் தேதி வரைக்கும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. சேலம், கிருஷ்ணகிரியில் கொட்டித்தீர்த்த கனமழையால் பெருமழை பெய்துள்ளது. மழை வெள்ள நீர் சாலைகளில் கரைபுரண்டு ஓடுகிறது. மழைநீருடன் கழிவு நீரும் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை 4ஆம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
5ஆம் தேதியன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications