4 மாவட்டங்களுக்கு அதி கனமழை.... இதெல்லாம் கைவசம் வைத்துக்கொள்வது அவசியம் மக்களே
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதி கனமழையும் பெய்யக்கூடும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். இதனால் தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் இரண்டு நாட்களுக்கு தேவையான பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஞாயிறுக்கிழமை வரை மிககனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி, மதுரை,சிவகங்கை,விருதுநகர், புதுக்கோட்டை தென்காசி ,தேனி,திண்டுக்கல், கரூர், திருச்சி,அரியலூர், பெரம்பலூர் ,திருவண்ணாமலை, சேலம் ,டெல்டா ,மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
விடிய விடிய வெளுத்து வாங்கும் மழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே நேற்று மாலை முதல் தலைநகர் சென்னை தொடங்கி மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. திருப்பூர், விருதுநகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. திருநெல்வேலி பேருந்து நிலையம் நீச்சல் குளம் போல மாறியுள்ளது. புதுக்கோட்டையில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டித்தீர்த்துள்ளது.
அத்தியாவசியப்பொருட்கள் அவசியம்
அதிதீவிர கனமழை பெய்து வருவதால் சென்னை மக்கள் 2 நாட்களுக்குத் தேவையான குடிநீர், பால், உணவுப் பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், மழை தொடர்பான புகார் மற்றும் உதவிகளுக்கு 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நவம்பர் 18.11.2021 அன்று சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீரை உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமல்லாது பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அனைவருமே அத்தியாவசிய பொருட்களை கையிருப்பு வைத்துக்கொள்வது அவசியம்.