சென்னையில் நள்ளிரவில் கொட்டிய மழையால் ஜில்லென்று மாறிய வானிலை - மகிழ்ச்சியில் மக்கள்
சென்னையில் இரவு நேரத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது. மாநகரிலும் புறநகர் பகுதிகளிலும் இரவு தொடங்கி மழை கொட்டித்தீர்த்தது.
சென்னை: தலைநகர் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் நள்ளிரவு நேரத்தில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. குரோம்பேட்டை, பல்லாவரம், அஸ்தினாபுரம் உள்ளிட்ட சில இடங்களில் மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை கொட்டித்தீர்க்கிறது. நேற்று மாலையில் இடியும் மின்னலுமாய் பெய்த கனமழையால் மதுரை மாவட்டத்தில் பல ஊர்களில் வெள்ள நீர் சாலைகளில் கரைபுரண்டு ஓடியது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்காலில் இடி,மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்தது.
அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் காரைக்கால், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்திருந்தது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது. சென்னையில் இரண்டு நாட்களாக வெயில் கடுமையாக வாட்டி வந்ததால் மக்களும் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த சூழ்நிலையில் நள்ளிரவில் மாநகரின் பல பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது
சென்னை சைதாப்பேட்டை கிண்டி, வடபழனி,கோயம்பேடு, பகுதிகளிலும் பெரம்பூர், கொளத்தூர், புரசைவாக்கம், வியாசர்பாடி, புளியந்தோப்பு, சைதாப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், கோட்டூர்புரம், பெசன்ட் நகர் பகுதிலும் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது. .
சென்னை புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், குரோம்பேட்டை,பல்லாவரம் அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, வளசரவாக்கம் , போரூர், மாங்காடு, குன்றத்தூர், திருவேற்காடு, செம்பரபாக்கம், ராமாபுரம், ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், உள்ளிட்ட பகுதிகளிலும் நள்ளிரவில் கனமழை பெய்தது.
புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கனமழை காரணமாக குரோம்பேட்டை, பல்லாவரம், அஸ்தினாபுரம் உள்ளிட்ட சில இடங்களில் மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.












Click it and Unblock the Notifications