சென்னையில் இரவில் கொட்டித்தீர்த்த மழை.. சூறைக்காற்று இடி-மின்னலுடன் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி!
சென்னை: வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி சென்னையில் நேற்று இரவு சூறைக்காற்று, இடி மின்னலுடன் பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Recommended Video
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை போதியளவில் பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக ஆறுகளில் நீர் வரத்து உள்ளது.
இந்த மழையின் காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு நீர் பிரச்சனை ஏற்படாது என்பதால் சென்னை உள்பட பெரும் நகர மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
இந்நிலையில் தற்போதும் ஆங்காங்கே பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் நேற்று முதல் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியிருந்தது.

கனமழைக்கு வாய்ப்பு
மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், 20, 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எப்படி?
மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படாத நிலையில் சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில் தான் நேற்று இரவு சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்தது.

சென்னையில் இடி மின்னலுடன் மழை
சென்னை குரோம்பேட்டை, தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. சூளைமேடு, கோடம்பாக்கம் பகுதிகளில் லேசான மழை பெய்த நிலையில் குன்றத்தூர், சோமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. மேலும் மதுரவாயல், வானகரம், போரூர் அதனை சுற்றிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சென்னையில் தற்போது மழையின்றி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் இரவில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications