குளிர்ந்து போன சென்னை.. நேற்று சாயங்காலம் முதல்.. நள்ளிரவு வரை.. கொட்டி தீர்த்த கனமழை..!
சென்னையில் நேற்று விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது
சென்னை: சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய காற்றுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று கூறப்பட்டது.
எச்சரிக்கை
மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் அரபிக்கடல் பகுதிக்கு 5 நாட்களும், கேரள கடல் பகுதிகளுக்கு 3 நாட்களும் செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பொழிந்தது...
மழை
குறிப்பாக, சென்னையில் கிண்டி, போரூர், வடபழனி, நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மிதமான மழையும், மயிலாப்பூர், அடையாறு, குரோம்பேட்டை, தியாகராயநகர், சைதாபேட்டை, அடையாறு, பெருங்களத்தூர், தாம்பரம், வண்டலூர், பல்லாவரம், அனகாபுத்தூரில் பரவலாகவும் மழை பொழிந்தது.
வடபழனி
கோயம்பேடு, அண்ணாநகர், கே.கே.நகர், அசோக்நகர், ஆழ்வார்பேட்டை, பூவிருந்தவல்லி, வளசரவாக்கம், ராமாபுரம், வடபழனி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, பூந்தமல்லி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பொழிந்தது..
குளிர்ச்சி
இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.. பலத்த மழைகாரணமாக இரவு 9 மணி வரை ஊரடங்கில் தளர்வுகள் இருந்தபோதும் மக்கள் அதற்கு முன்னதாகவே வீடுகளுக்குள் முடங்கிவிட்டனர்.. அதேபோல, திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நேற்றிரவு மழை பெய்தது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து இந்த பகுதியில் குளிர்ந்த காற்று வீசியது.