காற்றழுத்த தாழ்வு மண்டலம்..நாளை முதல் மீண்டும் மிக கனமழை..ஆரஞ்ச் அலர்ட் எங்கெங்கு தெரியுமா?
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் கனமழை மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் 21 ஆம் தேதி மிக கனமழை வாய்ப்பு உள்ளதாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியது முதலே பல பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. சில நாட்கள் மழை சற்றே ஓய்வெடுத்தது. இரு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
நாளைய தினம் கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஞாயிற்றுக்கிழமை கனமழை
செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளம் வடியாத நிலையில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எங்கெங்கு கனமழை
21ஆம் தேதியன்று வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறி இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் ஏற்கனமவை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள், நீர் நிலைகள் நிரம்பி வழியும் நிலையில் மீண்டும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு மிக கனமழை
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21ஆம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், 22ஆம் தேதி வட தமிழக மாவட்டங்களிலும்,டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications