சென்னையில் வெளுத்து வாங்கும் மழை...அடுத்த 1 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்குமாம்
சென்னையில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்த நிலையில் காலையிலிருந்து மீண்டும் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 1 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: காலை முதலே பலத்த மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பலத்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
குமரிக் கடல், இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகர உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதன்பின்னர் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதனால் டெல்டா மாவட்டங்கள், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை- காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவுறுத்தி இருந்தது வானிலை மையம்.
சென்னையில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் மதுரவாயில், பாரிமுனை, அண்ணா சாலை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்,அடையாறு, வேளச்சேரி ஆகிய இடங்களில் மழை பெய்தது.

காலையிலிருந்து மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, பல்லாவரம், மீனம்பாக்கம், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், அசோக் நகர், கேகே நகர், பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார் பேட்டை, உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், கேளம்பாக்கம், மறைமலை நகர், தாம்பரம், சேலையூர், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.
பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர்,திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் , மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications