சென்னையில் திடீர் பேய் மழை கொட்டி தீர்த்தது ஏன்?.. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம்!
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 மாதத்துக்கு மேலாக கனமழை பெய்து கொட்டியது. தென் மாவட்டங்களிலும், டெல்டா, கொங்கு மண்டல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
Recommended Video
அதுவும் கடந்த மாதம் சென்னையில் பேய்மழை கொட்டி தீர்த்தது. சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி பலத்த கன மழை பெய்தது. சென்னையில் எங்கு திரும்பினாலும் வெள்ளகாடாக காட்சியளித்தது.

ஏற்கனவே முடங்கிய சென்னை
சென்னையின் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. சில பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளநீர் தேங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர் . இதனால் பல நாட்களுக்கு சாலை போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மீண்டும் கொட்டி வரும் பேய் மழை
கடந்த சில நாட்களாக கனமழை இல்லாமல் சென்னை மக்கள் நிம்மதியாக இருந்தனர். இந்த நிலையில் இந்த நிம்மதியை குலைக்கும் வகையில் சென்னையில் இன்று மாலை 2 மணி நேரமாக கனமழை கொட்டி தீர்த்தது. கிண்டி, மயிலாப்பூர், எழும்பூர், மந்தைவெளி, மீனம்பாக்கம், நந்தனம், என பல்வேறு நகர்ப்புற பகுதியிலும், ஆவடி, அம்பத்தூர் என புறநகர் பகுதியிலும் மழை தொடர்ந்து கொட்டி வருகிறது.

வெள்ளக்காடான சென்னை
இதனால் சென்னையின் பல இடங்களில் சாலையில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிரதான சாலையான அண்ணாசாலையில் வெள்ளநீர் ஆறுபோல் ஓடுகிறது. பல்வேறு சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மயிலாப்பூர் பகுதியில் மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. சென்னை தலைமை செயலகத்திலும் தண்ணீர் புகுந்து விட்டது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

போக்குவரத்து நெரிசல்
அமைந்தகரையில் ஆம்பா ஸ்கைவாக் அருகே உள்ள கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டடு ஓடுகிறது. பலத்த மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 1 கிலோ மீட்டரைக்கடக்க 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பணி முடிந்து இல்லம் திரும்புவோர் கடும் அவதி அடைந்துள்ளனர்.

பேய் மழை கொட்டியது ஏன்?
இப்படியான திடீர் கனமழையை சென்னை வானிலை ஆய்வு மையமே எதிர்ப்பார்க்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுதான் காரணம்
தமிழக கடற்கரையோரம் நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்து வருவதாகவும்,
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக நிலப்பகுதி நோக்கி வேகமாக நகர்ந்ததால் அதிக மழை பெய்துள்ளது என்றும் புவியரசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications