புயல் காலம் போல் ஜனவரியில் அரிதான அடைமழை.. சென்னையில் 14 மணி நேரமாக வெளுத்தெடுக்கும் மழை
சென்னை: புயல் காலத்தை போல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டித் தீர்க்கிறது. சுமார் 14 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி வருகிறது.
வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31 ஆம் தேதியுடன் பொதுவாக முடிவடையும். இந்த காலகட்டத்தில் நிவர், புரேவி ஆகிய புயல்கள் தமிழகத்திற்கு வழக்கத்தை விட அதிகமாகவே மழையை கொடுத்தன.
இந்த நிலையில் மிகவும் அரிதாக ஜனவரி மாதம் அடை மழை பெய்து வருகிறது. கடந்த 2 ஆம் தேதி இரவு மழை பெய்தது. அத்துடன் நேற்று காலை முதல் வெயில் காய்ந்தது. ஆனால் இரவு 12 மணிக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.
6 மணிக்கு
இது வழக்கம் போல் அதிகாலையில் நின்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6 மணி ஆகியும் மழை நிற்காமல் பெய்து வந்தது. இதையடுத்து காலை 10 மணி வரை சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது.
500 கன அடி நீர்
ஆனால் அவர்கள் சொன்ன 10 மணியையும் தாண்டி தற்போது பிற்பகல் 3 மணி அளவிலும் மழை நிற்காமல் கொட்டி வருகிறது. இவ்வாறு தொடர்ந்து 14 மணி நேரமாக மழை ஓயாமல் பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் தலா வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
அடை மழை
இதனால் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜனவரி மாதம் வழக்கத்திற்கு மாறாக அடை மழை பெய்து வருகிறது. இது பார்ப்பதற்கு புயல் கால மழையை போல் உள்ளது. இன்னும் 6 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருள் மூழ்கிய சென்னை
பகல் நேரத்திலேயே இருள் சூழ்ந்த நிலை ஏற்பட்டுள்ளது. சைதாப்பேட்டை, முகப்பேர், அம்பத்தூர், அண்ணா நகர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் வீட்டை சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.