நீலகிரி, கோவையில் அதி கனமழை... இடி மின்னலுடன் வெளுத்து வாங்குமாம் - மண்சரிவுக்கும் வாய்ப்பு
தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் நீலகிரி, கோவையில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மண் சரிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 16 செமீ மழை பதிவாகியுள்ளது. நடுவட்டம், மேல்பவானியில் 14 செமீ மழையும், வால்பாறை, சின்னக்கல்லார், தேவாலா, பெரியாறு உள்ளிட்ட பல ஊர்களில் 10 செமீ மேல் மழை பதிவாகியுள்ளது. பல ஊர்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. அணையில் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

17 மாவட்டங்களில் கனமழை
தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்றைய தினம் தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி கோவையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையோரம்
நாளைய தினம் நீலகிரி, கோவையில் கனமழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் மழை வெள்ளம்
25, 26,27ஆம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரியில் மழை நீடிக்கும். சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டமாக காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலோரம்
தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 27ஆம் தேதி வரைக்கும் அரபிக்கடலோர பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலோர பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications