தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை அடித்து நொறுக்கப்போகுது - குடை அவசியம் மக்களே
தமிழகத்தில் இன்று சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் மாலை நேரங்களில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 5 செமீ மழையும் திருப்போரூரில் 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது. தாம்பரம், உத்திரமேரூரில் தலா 3 செமீ மழையும் வந்தவாசி, சின்னக்கல்லாறு பகுதிகளில் 2 செமீ மழையும் பதிவாகியுள்ளது. மதுரை சிட்டம்பட்டி, மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர், சோலையாறு, சென்னை, விமானநிலையம், ஆலந்தூர், காவேரிப்பாக்கம், செய்யாறு, வேலூர், காஞ்சிபுரத்தில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று முதல் 24ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், உள் மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இடியோடு மழை பெய்யும்
நாளைய தினம் கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை நீடிக்கும்
22ஆம் தேதி ஞாயிறுக்கிழமை சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழைக்கு வாய்ப்பு
23ஆம் தேதி திங்கட்கிழமை சேலம், தர்மபுரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24ஆம் தேதியன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இடி மின்னல் மழை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது, கனமழையும் இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது, கனமழையும் இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அரபிக்கடலில் காற்று
இன்று முதல் 24.08.2021 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications