லாக்டவுன் 6.0 அமல்.. தமிழகத்தில் இன்று எதெல்லாம் இயங்கலாம்?.. எதெல்லாம் இயங்க கூடாது?.. லிஸ்ட் இதோ!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில் எதற்கெல்லாம் தடை, எதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் நீடிக்கிறது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 6ஆவது கட்டமாக அமலாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது ஜூலை 6 வரை மேற்கண்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமலாகிறது. பிற மாவட்டங்களில் தளர்வுகள் கூடிய ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அந்த நிலையில் எதற்கெல்லாம் தடை, எதற்கெல்லாம் தளர்வுகள் என்பதை பார்ப்போம்.
பாதிப்பு எண்ணிக்கையிலும் பாதி.. பலி எண்ணிகையிலும் பாதி.. அமெரிக்காவை பின்தொடரும் பிரேசில்
பேரூராட்சிகள்
பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி விதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது. ஜூலை 6 முதல் ஐடி நிறுவனங்கள் சென்னையில் 50 சதவீத ஊழியர்கள் அல்லது 80 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதியில் 100 சதவீதத்தில் குறைந்தபட்சம் 20 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணிபுரியலாம். மற்ற மாவட்டங்களில் ஜூலை 1 முதல் 100 சதவீதம் ஊழியர்கள் பணிபுரியலாம். ஆனால் 20 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும்.
துணிக் கடைகள்
அது போல் மற்ற தனியார் அலுவலகங்களில் சென்னையில் 6-ஆம் தேதி முதல் 50 சதவீதம் பேர் பணியாற்றலாம். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 100 சதவீதம் பேர் பணியாற்றலாம். அதுபோல் மற்ற மாவட்டங்களில் இன்று முதல் 100 சதவீதம் பேர் பணியாற்றலாம். பெரிய நகைக் கடைகள், துணிக் கடைகள் ஷாப்பிங் மால்களை தவிர்த்து மேற்கண்ட 3 பிரிவுகளில் 50 சதவீதம் ஊழியர்களுடன் பணியாற்றலாம்.
ஹோட்டல்கள்
டீக்கடைகள், ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்களில் ஜூலை 6-ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் ஏசி இல்லாமல் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். மதுபான கடைகள் சென்னையில் இயங்கக் கூடாது, மற்ற 3 மாவட்டங்களில் ஜூலை 6 முதல் காலை 10 மணி முதல் 8 மணி வரை செயல்படலாம். அது போல் மற்ற மாவட்டங்களில் இன்று முதல் காலை 10 மணி முதல் 8 மணி வரை செயல்படலாம்.
சேவைகள்
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. காய்கறிகள் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். முட்டை, மாமிசக் கடைகள் சமூக இடைவெளியுடன் இயங்கலாம். வாடகை வாகனங்களில் டிரைவருடன் 3 பேர் பயணிக்கலாம். ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாவாக இருந்தால் டிரைவருடன் இருவர் பயணிக்கலாம்.
ஸ்பாக்கள்
முடித்திருத்தும் கடைகள், சலூன்கள், ஸ்பாக்கள், ப்யூட்டி பார்லர்கள் வழிகாட்டும் நெறிமுறைகளுக்கேற்ப ஏசி இல்லாமல் இயங்கலாம். இறுதிச் சடங்கில் 50 பேருக்கும் மேல் செல்ல கூடாது, திருமணங்களிலும் 50 பேருக்குமேல் கலந்து கொள்ளக் கூடாது. சென்னையில் அனைத்து தொழிற்சாலைகளும் தொடங்க அனுமதியில்லை. அது போல் மாவட்ட போக்குவரத்தும் இல்லை. இந்த மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலாகும்.
தடை விதிப்பு
பள்ளிகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொது பேருந்து போக்குவரத்து : மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 1.7.2020 முதல் 15.7.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து வேறு எதற்கும் அனுமதி இல்லை.