ராமர் கோயில் கும்பாபிஷேகம் அன்று அயோத்திக்கு பறந்த விஐபிக்கள்.. மும்பையிலிருந்து இத்தனை விமானங்களா?
சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து விஐபிகளுக்காக மொத்தம் 39 விமானங்கள் இயக்கப்பட்டன.
அயோத்தியில் ராமர் பிறந்த ஜென்பூமியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கோயில் கட்டும் பணிகள் தொடங்கின.

சுமார் 2.7 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் குடமுழுக்கு கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 2000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த கோயிலில் மக்கள், விஐபிக்கள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் அங்கு 4 மணி நேரம் இருந்தார். அவர்தான் கோயில் கும்பாபிஷேக பணிகளை தொடங்கி வைத்தார். பால ராமர் கண் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராமருக்கு தீபாராதனை செய்தார்.
இந்த கோயில் கும்பாபிஷேகத்திற்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என 7000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ரன்வீர் கபூர், சச்சின், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விஐபிகள் சென்று வர வசதியாக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. ஜனவரி 22 ஆம் தேதி மொத்தம் 39 தனியார் விமானங்கள் இயக்கப்பட்டன. லண்டன், ஜோத்பூர், டேராடூன், போபால், புவனேஸ்வர், பெங்களூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 1 ஜெட் விமானங்கள் இயக்கப்பட்டன.
அது போல் ஜாம்நகரில் இருந்து 3, லக்னோவிலிருந்து 4, டெல்லியிலிருந்து 5, ஹைதராபாத்திலிருந்து 7, மும்பையிலிருந்து 13 விமானங்கள் இயக்கப்பட்டன. இதில்தான் விஐபிக்கள் பயணித்து ராமர் கோயிலை வந்தடைந்தனர்.












Click it and Unblock the Notifications