கோயம்பேடு காய் கனி விற்பனை அங்காடியை திறக்க உத்தரவிடக்கோரி மனு - அரசு பதில் தர ஹைகோர்ட் உத்தரவு
கோயம்பேடு வணிக வளாகத்தில் காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை: கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கும், கோயம்பேடு சந்தை நிர்வாக குழு தலைமை நிர்வாக அதிகாரிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாகத்தில் காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுசம்பந்தமாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் கோயம்பேடு மொத்த வணிக வளாகம், சில்லறை வணிக கடைகளில் வியாபாரம் நடைபெற்றது.
கொரோனா தொற்று பரவல் அதிகமானதை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இயங்கிய கனிகள் மற்றும் பூக்கள் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் கடந்த மே மாதம் முதல் வாரத்திலும் மூடப்பட்டன.
பின்னர் மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் தற்காலிகமாக செயல்பட தொடங்கின. படிப்படியாக லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு, உணவுதானிய மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 18ம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 28ம் தேதியும் திறக்க உத்தரவிட்டது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு சார்பில் கோயம்பேடு சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை காலை, மாலை என இருவேளைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரித்துள்ள சூழலில், சென்னை கோயம்பேடு சந்தை மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதியாக உருவெடுக்கத் துவங்கியுள்ளது என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனி மொத்த விற்பனை அங்காடியை திறக்க உத்தரவிடக் கோரி சென்னை கோயம்பேடு 4வது நுழைவு வாயில் கனி மொத்த வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பொது செயலாளர் எம்.செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் போதுமான வசதிகள் இல்லை எனவும், 700 பதிவு செய்யப்பட்ட வியாபாரிகள் உள்ள நிலையில், அங்கு 200 வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மற்ற வியாபாரிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கோயம்பேடு கனிகள் மொத்த அங்காடியை திறக்க கோரி அளித்த மனுவை, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் பரிசீலித்த அரசு, படிப்படியாக அங்காடிகள் திறக்கப்படும் என மழுப்பலாக பதில் அளித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
ஆயுதபூஜை வருவதால் கனிகள் மொத்த அங்காடியை திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும், சில்லறை விற்பனைக்கு அனுமதியளித்ததே தொற்று பரவலுக்கு காரணம் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது.
கோயம்பேடு அங்காடி பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், பணிகள் முடிந்து ஆய்வு மேற்கொண்ட பின் படிப்படியாக அங்காடிகள் திறக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், மனுவுக்கு டிசம்பர் 14ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக நகராட்சி நிர்வாக செயலாளர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சந்தை நிர்வாக குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.