வேட்பாளர்களுக்கு தனித்துவமான சின்னங்களை ஒதுக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் உத்தரவு
தேர்தலில் வேட்பாளர்களுக்கு மற்ற சின்னங்களில் இருந்து வேறுபடுத்தி அடையாளம் காணும் வகையிலான தனித்துவமான சின்னங்களை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை: தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க கோரி புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்துள்ள விண்ணப்பத்தின் மீது ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் வேட்பாளர்களுக்கு மற்ற சின்னங்களில் இருந்து வேறுபடுத்தி அடையாளம் காணும் வகையிலான தனித்துவமான சின்னங்களை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1997 ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி, அதுமுதல் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சியான தங்கள் கட்சிக்கு, 2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2014 ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும், எதிர்வர உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதால், தங்கள் கட்சிக்கு பொது சின்னமான தொலைக்காட்சி சின்னத்தை ஒதுக்கக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தொலைக்காட்சி சின்னத்தைப் போல இருக்கும் கரும்பலகை, குளிர்சாதன பெட்டி, எழுது பலகை, தீப்பெட்டி போன்ற சின்னங்கள் பொது சின்ன பட்டியல் இருப்பதால் குழப்பம் ஏற்படுவதாகவும், அதனால் தொலைக்காட்சி சின்னத்தைப் போல இருக்கும் சின்னங்களை பொது சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, சின்னங்கள் குழப்பம் குறித்து தாமதமாக புகார் தெரிவித்துள்ளதாகவும், இருப்பினும், பிற சின்னங்களில் இருந்து வேறுபடுத்தி அடையாளம் காணும் வகையில் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
மேலும், தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க கோரி மனுதாரர் அளித்துள்ள விண்ணப்பத்தின் மீது ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.