சேலம் பல்கலை. வினாத்தாளில் சர்ச்சை.. விசாரணைக்கு உத்தரவு.. உயர்கல்வித்துறை உறுதி!
சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில், குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை உறுதி அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. 1997ம் ஆண்டு முதல் இயங்கும் இந்த பல்கலைக்கழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து பட்டம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு மாணவர்களுக்கான 2வது செமஸ்டர் தேர்வு நடந்துள்ளது. இதில், 4 சாதிப் பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சமூக நீதிக்காக போராடிய பெரியாரின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் விளக்கம் அளித்தார். அதில், இந்த வினாத்தாள்கள் வெளிக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலம் தயாரிக்கப்படுவதாகவும் வினாத்தாள்களை சரிபார்த்தால் கசிந்துவிடும் என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை. இந்த கேள்வி குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு, வினாத்தாள் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த வினாத்தாள் விவகாரம் தொடர்பாக உயர் கல்வித்துறை உயர் அலுவலரின் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். அந்தக் குழு அளிக்கும் விசாரணை அறிக்கை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications