"வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு தான் இந்தி.. அது நம்மை சூத்திரர்கள் ஆக்கும்!" டிகேஎஸ் இளங்கோவன் பரபர
சென்னை: இந்தி மொழி சர்ச்சை சற்றே ஓய்ந்து இருந்த நிலையில், திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அப்போது அவர் இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பு மொழியாக ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்று ரீதியில் பேசி இருந்தார்.

எதிர்ப்பு
மேலும், இந்தி ஆங்கிலத்திற்குத் தான் மாற்றே தவிர உள்ளூர் மொழிகளுக்கு அல்ல என்றும் கூறினார். இது மிகப் பெரிய அளவில் சர்ச்சையானது. மத்திய அரசு மீண்டும் இந்தியைத் திணிக்க முயல்வதாகப் பலரும் சாடினர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு கட்சியினரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

டிகேஎஸ்.இளங்கோவன்
இந்தி மொழி சர்ச்சை சற்றே ஓய்ந்த நிலையில், இப்போது திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இந்தி மொழி என்பது வளர்ச்சியடையாத மாநிலங்களின் மொழி என்றும் இந்தி மொழியைத் தமிழகத்தில் அமல்படுத்தினால் அது தமிழ் மக்களையும் சேர்த்து சூத்திரர்களாக ஆக்கிவிடும் என்று டிகேஎஸ்.இளங்கோவன் கூறி உள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

வளர்ச்சி அடையாத மாநிலங்கள்
இந்தி பேசும் மாநிலங்கள் வளர்ச்சி அடையாமல் உள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற வளர்ச்சியடையாத மாநிலங்களில் இந்தி தான் தாய்மொழியாக உள்ளது. மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு, ஒடிசா, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை. இந்த மாநிலங்கள் அனைத்தும் வளர்ந்த மாநிலங்களாக உள்ளன.

வளர்ச்சிக்கு உதவவில்லை
நான் அந்த மொழியைப் பற்றி மட்டுமே எனது கருத்தைத் தெரிவித்தேன். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களின் வளர்ச்சிக்கு இந்தி மொழி உதவவில்லை. நான் நானாக எதுவும் கூறவில்லை. நம்மிடம் இருக்கும் தரவுகளை வைத்தே நான் இப்படிக் கூறினேன்.

சூத்திரர்களாக மாற்றிவிடும்
இந்தி என்ன செய்யும்? அது நம்மைச் சூத்திரர்களாக மாற்றிவிடும். அது நமக்கு எந்த நன்மையும் செய்யாது. நான் உங்களுக்குச் சொல்கிறேன். வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் தாய்மொழி எதுவும் இந்தி இல்லை. வட இந்தியாவில் மக்கள் சூத்திரர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த மனுதர்மம் மக்களைப் பிளவுபடுத்துவதால் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகளும் இப்போது திராவிட மாடலை கையில் எடுத்துள்ளன.

வட இந்தியா
வட இந்தியாவில் மனுதர்மம் கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் எப்படி சூத்திரர்கள் ஆக்கப்பட்டனரோ, அதேபோல இந்தி மொழி திணிக்கப்பட்டால், அடுத்து அந்த கலாசாரமும் திணிக்கப்படும். மொழியை நம் மீது திணித்தால், அது கலாச்சாரத்தைத் திணிக்கும் ஒரு முயற்சி. அதன் பின்னர் நாமும் சூத்திரர்களாக ஆக்கப்படுவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தி மொழி சர்ச்சை இப்போது தான் மெல்ல உயர்ந்த நிலையில், டிகேஎஸ் இளங்கோவன் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications