ஹோட்டல்களில் பார்சல் மட்டுமே.. பெரும் நஷ்டம்.. முடங்கிய வாழ்வாதாரம்..புலம்பி தவிக்கும் உரிமையாளர்கள்
சென்னை: இந்தியாவில் மத்திய பா.ஜ.க அரசும், பல்வேறு மாநில அரசுகளும் ஆட்சி நடத்தி வந்தாலும், நமது நாட்டை இப்போது ஆட்சி புரிவது என்னவோ கொரோனா வைரஸ்தான்.
முதல் அலையில் மக்களை அதிகமாக மிரட்டி பார்த்த கொரோனா வைரஸ், இரண்டாவது அலையில் மக்களை முழுமையாக ஆதிக்கம் செய்து கொண்டிருக்கிறது.
கொரோனா ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர ஒரு பக்கம் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், மற்றொரு புறம் தடுப்பு கட்டுப்பாடு முறைகளும் கடுமையாக கடைபிடிக்கபட்டு வருகின்றன.
கொரோனா பாதிப்பு.. திடீர் மூச்சு திணறல்.. 34 வயதில் உயிரிழந்த 'மிஸ்டர் இந்தியா' ஆணழகன்
தமிழகத்தில் கட்டுப்பாடுகள்
தமிழகத்தை பொறுத்தவரை மால்கள், தியேட்டர்கள், பெரிய கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. இது தவிர ஹோட்டல்களில், டீக்கடைகளில் பார்சல்கள் மட்டுமே அனுமதி. அங்கு இருந்து சாப்பிட அனுமதி கிடையாது என்ற கட்டுப்பாடும் இருக்கிறது.
வாழ்வாதாரம் பாதிப்பு
இதனால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளின் உரிமையாளர்கள் புலம்பி தவிக்கின்றனர். அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக சென்னையின் பெரும்பாலான உணவகங்களில் வாடிக்கையாளர்கள் பெரிதும் குறைந்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அரசு ஆலோசிக்க வேண்டும்
இது தொடர்பாக சென்னை ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் எம்.ரவி வேதனையுடன் கூறியதாவது:- கடந்த ஆண்டில் லாக்டவுனால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தோம். தற்போதுதான் கொஞ்சம் ஏற்றம் கண்டு வந்த நிலையில் எங்கள் தலையில் மீண்டும் இடியை இறக்கியுள்ளது தமிழக அரசு. பார்சல் மட்டுமே வழங்கப்படுவதால் ஸ்டார் ஹோட்டல்கள் முதல் சிறு தேநீர் கடை வரை பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஊரடங்கு போடுவதற்கு முன்பு அரசு எங்களிடமும் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும்
மக்கள் விருப்பம் இதுதான்
வேறு ஒரு ஹோட்டலின் உரிமையாளர் காந்தி கூறுகையில், இதுபோன்ற வேதனையை வாழ்க்கையில் நான் இதுவரை சந்தித்தது இல்லை. கொரோனா வைரஸ் காரணமாக கடந்தாண்டு நஷ்டத்தை சந்தித்தோம். தற்போது 2-வது அலை எங்களது தொழிலையே நசுக்கியுள்ளது. மக்கள் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடவே விரும்புகிறார்கள், ஆன்லைன் ஆர்டர்களை அவர்கள் விரும்புவதில்லை. எனவே அரசு எங்களை பார்க்க வேண்டும்' என்றார்
கடும் நஷ்டம்
''வாடிக்கையாளர்களை பார்க்கும்போது மிகவும் சங்கடமாக உள்ளது. வேலைக்கு செல்பவர்கள் பார்சல்கள் மூலம் உணவுகளை வாங்கி வெளியவே நின்று சாப்பிடுவதை பார்க்க வேதனையாக இருக்கிறது. அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து நஷ்டத்துடன் ஓட்டல்களை நடத்தி வருகிறோம்'' என்று கவலையுடன் தெரிவித்தார் ஸ்ரீ கிருஷ்ணா ஹாட்ஸ்பாட் ஹோட்டலின் உரிமையாளர் முத்துலட்சுமி.
தொழிலாளர்கள் அவதி
ஹோட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்படுவது வாடிக்கையாளர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. ஒருவர் வேலை விஷயமாக வெளியூர் செல்கிறார் என்றால் ஹோட்டலில் அமர்ந்து கொண்டுதான் சாப்பிட விரும்புவார். பார்சல் வாங்கி கொண்டு எங்கே போய் சாப்பிடுவார்? என்ற சிக்கலும் நீடிக்கிறது. ஹோட்டல் உணவையே நம்பியுள்ள சென்னை போன்ற பெரிய நகரங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு கட்டுப்பாடுகளுடன் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.